நீங்க முதல்வரானால் பிரச்சனைகள் தீரும்னு பிரதமர் சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தது: விஜயகாந்த்
சென்னை: தாம் தமிழக முதல்வரானால் பிரச்சனைகள் எல்லாம் தீருமோ என்று பிரதமர் மன்மோகன்சிங் என்னிடம் கூறியபோது மகிழ்ச்சியாக இருந்தது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து தேமுதிக எந்த ஒரு முடிவையும் அறிவிக்காமல் இருக்கிறது. இந்த நிலையில் திடீரென பிரதமர் மன்மோகன்சிங்கை அவரது இல்லத்தில் சந்திக்க நேரம் கேட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் விஜயகாந்த்.
தமிழக மீனவர் பிரச்சனை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கவே பிரதமரை தமது எம்.எல்.ஏக்கள் 20 பேருடன் சந்திப்பதாக விஜயகாந்த் தரப்பு தெரிவித்தது. இருப்பினும் காங்கிரஸ் கூட்டணி குறித்தே இந்த சந்திப்பில் விஜயகாந்த் பேச இருப்பதாக கூறப்பட்டது.
பிரதமர் மன்மோகன்சிங்குடன் சந்திப்பு
இந்நிலையில் நேற்று சென்னையில் இருந்து 20 எம்.எல்.ஏக்களுடன் விஜயகாந்த் டெல்லி புறப்பட்டுச் சென்றார். இன்று காலை 11 மணியளவில் மணிக்கு பிரதமர் மன்மோகன்சிங்கை அவரது இல்லத்தில் விஜயகாந்த் சந்தித்தார். இந்த சந்திப்பில் விஜயகாந்த் உடன் தேமுதிகவின் 20 எம்.எல்.ஏக்களும் பங்கேற்றனர். இலங்கை தமிழர் பிரச்சனை, தமிழக மீனவர் பிரச்சனை, தாதுமணல் கொள்ளை, முல்லை பெரியார், காவேரி உள்ளிட்ட தமிழகத்தின் பிரதான 9 பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி பிரதமர் மன்மோகன்சிங்கிடம் விஜயகாந்த் மனு ஒன்றை கொடுத்தார்.
பேசியது என்ன?
பிரதமருடனான இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் விஜயகாந்த் கூறியதாவது: பிரதமரை பார்த்தேன். தமிழ்நாட்டு பிரச்சனைகள் பற்றிதான் அதிகம் பேசினேன். தமிழக மீனவர்கள் பிரச்சனை பற்றி பேசினேன். அதற்கு, தமிழ்நாட்டு மீனவர்களும் தமிழர்கள். இலங்கை மீனவர்களும் தமிழர்கள். ஆகையால் இந்த பிரச்சனையை நாங்கள் கவனத்துடன் பார்ப்பதாக கூறினார்.
தமிழக மீனவர்களும் எல்லை தாண்டக் கூடாது. மீனவர்களை கைது செய்தால் உடனே விடுவிக்க வேண்டும். படகுகளை சேதப்படுத்தக் கூடாது. வலைகளை அறுக்கக் கூடாது என்று இலங்கையிடம் கண்டித்திருக்கிறோம் என்றார்.
நதிநீர் பிரச்சனை..
தண்ணீர் பிரச்சனை பற்றி பேசினோம். அதற்கு, கர்நாடகா மாநிலத்தவர்கள் தங்களுக்கு தண்ணீர் இல்லை என்று சொல்கிறார்கள். கேரளாவும் அதேபோல் சொல்கிறது. ஆகையால் அனைத்து மாநிலங்களையும் அனுசரித்து பேசி வருவதாக கூறினார்.
நீங்க முதல்வரானால்..
மின்வெட்டு தற்போது 7 மணி நேரம், 8 மணி நேரம் தமிழகத்தில் ஏற்படுகிறது. வெயில் காலம் வந்தால் மேலும் அதிகரித்தால் என்ன செய்வது. ஆனால் தமிழக அரசு அதைக் கண்டுகொள்வதில்லை என்று கூறினோம். அனைத்து பிரச்சனைகளையும் பார்த்துகொண்டுஇருப்பதாக கூறினார். தமிழக முதல் அமைச்சர் கடிதம் எழுதுகிறார். உங்களைப் போல் ஏன் நேரில் வரவில்லை. ஒருவேளை நீங்கள் முதல்வரானால் இந்த பிரச்சனைகள் எல்லாம் தீருமோ... அப்படி சொல்லும்போது சந்தோஷமாக இருந்தது.
விமர்சித்தால் பதவி உயர்வு
நான் சட்டசபைக்கு போகவில்லை. எனது கட்சி எம்எல்ஏக்கள் செல்கிறார்கள். ஆகவே அவர்கள் பிரதமரை சந்திக்க வேண்டும் என்பதற்காக அவர்களுடன் நான் வந்தேன். நான் ஏன் சட்டசபைக்கு செல்லவில்லை என்றால், என்னை யார் தாக்கி பேசுறாங்களோ, கிண்டலடிக்கிறாாங்களோ, ஜெயலலிதாவை உசத்தி பேசுகிறார்களே அவர்களுக்கு பதவி உயர்வு கொடுக்கிறார்கள்.
ஆகவே பதவி கொடுக்கிறதுதான் அவர்களுடைய வேலை. சட்டசபைக்கு வந்து நான் என்ன பண்ண. ரோடு சரியில்லை. மின்வெட்டு ஏற்படுகிறது. தண்ணீர் வரலை என்று மக்கள் பிரச்சனைகளை சொல்லி, அதை செய்துகொடுப்பதாக சொன்னால் நான் வருகிறேன். அசிகத்தை நான் எதையுமே நான் பார்க்கவில்லை.
அசிங்கப்படுத்த நினைக்கிறாங்க..
விஜயகாந்தை அசிங்கப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படி இருக்கும்போது நான் ஏன் மற்றவர்களை தொந்தரவு செய்ய வேண்டும். மற்றவர்கள் அவர்களது கோரிக்கைகளை பேசட்டும்.
என்னுடைய தொகுதிக்கு என்னால் முடிந்தளவு செய்கிறேன். இன்று எனது கட்சி எம்எல்ஏக்களுடன் நான் டெல்லி வந்து பிரதமரை பார்க்கிறேன். அவர்கள் (ஜெயலலிதா) வந்து பிரதமரை பார்த்தால் என்ன குறைந்தா போகும்.
டெல்லிக்கு வரலாமே?
ஒரு கட்சியை அழிக்க நினைக்கிறார்களே தவிர, தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று பிரதமரை பார்க்கலாம். குடியரசுத் தலைவரை பார்க்க டெல்லி வரலாமே. தோட்டத்துக்கு எல்லாம் தனி விமானம் மூலம் செல்கிறார்கள். கோர்ட்டுக்கு செல்கிறார்கள். அதற்கு டெல்லி வரலாமே. தமிழக பட்ஜெட் மக்கள் போற்றுகிற பட்ஜெட்டாக இருக்க வேண்டும். தூற்றுகிற பட்ஜெட்டாக இருக்கக் கூடாது.
110 மேனியா
இந்த பட்ஜெட் தூற்றுகிற பட்ஜெட். துறையைச் சேர்ந்த அமைச்சர்கள் சட்டசபையில் பதில் சொல்ல மாட்டார்கள். அந்த அம்மாதான் படிக்கிறாங்க. 110 மேனியா அந்த அம்மாவுக்கு என்று நான் சொல்லுவேன். ஓ.பன்னீர்செல்வம் அம்மா... அம்மா.... என்று சொல்கிறார். இவர்தானே நிதி அமைச்சர் இவர்தானே சொல்லவேண்டும். கண்மூடித்தனமாக இருக்கக் கூடாது. எல்லாவற்றையும் சித்தரிக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு புரியும்.
இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்தார்.