ஜெயலலிதா உடல்நிலை பற்றி அதிமுக எம்பிகளிடம் விசாரித்த ராகுல் - ரசிக்காத திமுக தரப்பு
ஜெயலலிதா உடல்நலம் குறித்து அதிமுக எம்பிகளிடம் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி விசாரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி: முதல்வர் ஜெயலலிதா கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதிமுக தொண்டர்கள் அப்பல்லோ வாசலில் தவமிருக்கின்றனர். அரசியல் கட்சித்தலைவர்கள் தினசரியும் வந்து நலம் விசாரித்து செல்கின்றனர்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் இருந்து வந்து நலம் விசாரித்து விட்டு சென்றார். இது திமுகவினர் மத்தியில் அப்போதே சலசலப்பை ஏற்படுத்தியது. இது அரசியல் ஸ்டண்ட் என்று பலரும் கருத்து கூறினர்.
நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்பிக்களிடம் பிரதமர் மோடி நேற்று முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரித்தார். முதல்வர் குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் கூறியதை அதிமுக எம்.பிக்கள் தம்பித்துரை உள்ளிட்டோர் தெரிவித்தனர்.
இந்த நிலையில் மத்திய அரசின் ரூபாய் நோட்டு ஒழிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் ஒன்றாக இணைந்து எதிர்ப்பை தெரிவித்தனர்.
போராட்டம் முடிந்த உடன் அதிமுக எம்.பி.க்களை தேடிப் போய் ராகுல்காந்தி பேசினாராம். அவர்களிடம் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து அக்கறையுடன் விசாரித்திருக்கிறார் ராகுல். இதனை திமுக தரப்பு ரசிக்கவில்லையாம்.
அதேபோல கருணாநிதியின் உடல்நலம் குறித்து கனிமொழியிடம் மோடி நலம் விசாரித்ததை காங்கிரஸ் தரப்பு ரசிக்கவில்லையாம். இப்படி ஒரு அரசியல் இருதரப்பிலும் நிலவுகிறது.
அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை நிரந்தர பகைவரும் இல்லை என்பது தெரியாதா என்ன?