குத்துப்பாட்டுக்கு ஆட்டம் போடுமாறு ஐகோர்ட் நீதிபதி தொல்லை: பதவியை ராஜினாமா செய்த பெண் நீதிபதி!
போபால்: குவாலியரில் பாலியல் தொல்லை குறித்த வழக்குகளை விசாரித்து வரும் விசாகா குழுவின் பெண் தலைமை நீதிபதி, மத்தியப்பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதியின் பாலியல் தொல்லையால் தனது பதவியை ராஜினாமா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
15 வருடங்கள் டெல்லியில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தவர் அந்த பெண் வழக்கறிஞர், நீதித்துறை நடத்திய தேர்வில் வெற்றி பெற்றார். அதன் பின் கடந்த 2011ம் ஆண்டு அதே நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த 2013 ஆம் ஆண்டு பாலியல் தொல்லைகள் குறித்த புகார்களை விசாரிக்கும் விசாகா குழுவின் தலைவராக இவர் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், குவாலியரின் நிர்வாக நீதிபதியாக உள்ள மத்தியப்பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர், தான் குடியிருக்கும் பங்களாவுக்கு தனியாக வந்து தன்னை சந்திக்குமாறு அப்பெண் நீதிபதிக்கு நெருக்கடி கொடுத்துள்ளார்.
இது குறித்து தலைமை நீதிபதி ஆர். எம். லோதா மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எச்.எல். தத்து, டி.எஸ். தாக்கூர், அனில் ஆர் தவே, தீபக் மிஸ்ரா மற்றும் அனில் மிஸ்ரா ஆகியோருக்கும் மத்தியப்பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் அப்பெண் நீதிபதி கடிதம் எழுதியுள்ளார். தனது இல்லத்தில் நடைபெற உள்ள விழாவில் குத்துப் பாடல் ஒன்றுக்கு நடனமாடுமாறு மாவட்ட பதிவாளர் மூலமாக தனக்கு அந்த நீதிபதி தகவல் தெரிவித்தாக அக்கடிதத்தில் அவர் புகார் கூறியுள்ளார்.
ஆனால் அவ்விழாவிற்கு தான் செல்லவில்லை என்று தெரிவித்துள்ள அப்பெண் நீதிபதி, விழாவுக்கு மறுநாள் தன்னை சந்தித்த அந்த நீதிபதி, அழகான பெண் கவர்ச்சி நடனமாடுவதை தன்னால் ரசிக்க முடியாமல் போய்விட்டதாக கூறி, அதை காண ஆவலாக உள்ளதாக தன்னிடம் மீண்டும் வற்புறுத்தியதாக தனது கடிதத்தில் கூறியுள்ளார். அவரது ஆசைக்கு இணங்க மறுத்த தன் மீது கடும் கோபம் கொண்ட அவர், தவறே செய்யாதபோதும் தன்னை பலமுறை கண்டித்தாக தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்திற்கு 11 மணிக்கு வரவேண்டிய தன்னை 10.30 மணிக்கே வருமாறும், மாலை 6 மணி வரை நீதிமன்ற பணியில் இருக்குமாறும் தனக்கு அந்த நீதிபதி தொல்லைகள் கொடுத்தார். கடும் மன உளைச்சலுக்கு உள்ளான நான், எனது கணவருடன் அவரை சந்திக்க சென்றபோது என்னையும், எனது கணவரையும் பதினைந்து நாள் கழித்து வருமாறு கூறி அவமானப்படுத்தியதாக கூறியுள்ளார் அப்பெண் நீதிபதி. பின்னர் தனக்கு பணியிடமாற்றமும் வழங்கப்பட்டதாகவும் அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
இந்த பணியிட மாற்றத்தால் தனது மகளின் கல்வி பாதிக்கப்படும் என்றும், அதனால் இந்த வருடம் மட்டும் அதே நீதிமன்றத்தில் பணிபுரிய அனுமதிக்கவேண்டும் என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை சந்தித்து முறையிட முயன்றபோது அவர் என்னை சந்திக்க மறுத்துவிட்டார். வேறுவழியில்லாமல் நான் எனது பதவியை ஜூலை 15ந் தேதி ராஜினாமா செய்ய நேர்ந்தது என தனது கடிதத்தில் அப்பெண் நீதிபதி உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.