ஜெ. வழக்கில் அப்பீல்: கர்நாடக அரசின் அதிரடியும், 'அந்த' தொலைபேசி அழைப்பும்..!
பெங்களூர்: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இழுபறி நிலைமாறி திடீரென மேல்முறையீடுக்கு கர்நாடக அரசு பச்சைக்கொடி காட்டியதன் பின்னணியில் சில பரபரப்பு காரணங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அவரை விடுதலை செய்து கடந்த மாதம் 11ம் தேதி தீர்ப்பு வெளியானது.
பொதுவாக விடுதலை செய்யப்பட்ட வழக்கில், மேல்முறையீடு செய்ய 3 மாத கால அவகாசமும், தண்டனை வழக்கில் அப்பீல் செய்ய 2 மாத காலங்கள் அவகாசமும் வழங்கப்படும். எனவே ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்ய 3 மாதகாலம் அவகாசம் இருந்தது.
எதிர்க்கட்சிகள்
இருப்பினும், தமிழக எதிர்க்கட்சிகள், கர்நாடக அரசு நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வெளியானது முதலே வலியுறுத்தி வருகின்றன. திமுக தலைவர் கருணாநிதி இதுகுறித்து அறிக்கை வெளியிட்டார். பாமக நிறுவனர் ராமதாஸ், கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதி, அதை கட்சி நிர்வாகிகள் மூலம் நேரடியாக கொடுக்கச் செய்தார். எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்தும், சித்தராமையாவுக்கு கடிதம் அனுப்பினார்.
சட்ட நெருக்கடி
அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சாரியா, தலைமை வழக்கறிஞர் ரவிவர்மகுமார், சட்டத்துறை செயலாளர் செங்கப்பா ஆகியோரும், மேல்முறையீடு அவசியம் என்று, சட்டத்துறைக்கு கடிதம் அனுப்பியிருந்தனர். பல முனைகளில் இருந்து நெருக்கடி அதிகரித்தாலும்கூட, கர்நாடக அரசு அசையாமல் இருப்பதை போலவே காட்டிக் கொண்டது. நெருக்கடியில் இருந்து தப்பிக்க, கர்நாடக காங்கிரஸ் சட்டப்பிரிவு தலைவர் தனஞ்சயா, திட்டக்குழு தலைவர் சி.எம்.இப்ராஹிம் ஆகியோரை வைத்து பிளே செய்தது கர்நாடக அரசு.
தற்காப்பு கர்நாடகா
தனஞ்சயா, முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் கர்நாடகா இதில் நிர்வாக உதவிகளைதான் செய்தது. நமது உதவி முடிந்துவிட்டது. சட்டரீதியில் நமக்கு தொடர்பில்லை. எனவே, இந்த வழக்கில் இருந்து பின்வாங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இப்ராஹிம் அளித்த பேட்டியிலும் ஏறத்தாழ இதே கருத்து எதிரொலித்தது. எனவே கர்நாடக அரசு, இந்த விவகாரத்தை கைகழுவுவதற்காக, இதுபோன்ற கருத்தை பரப்பிவருவதாக பரபரப்பாக பேசப்பட்டது.
கடந்த வாரமும் டிமிக்கி
கடந்த வாரம் கர்நாடக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றபோதுகூட, ஜெயலலிதா விவகாரம் விவாதத்துக்கு எடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அரசு தலைமை வக்கீலிடம் இரு சந்தேகங்கள் கேட்க வேண்டும் என்று கூறி, நைசாக அந்த விவகாரத்தை ஒத்திப்போட்டது கர்நாடக அரசு. ஏன் இப்படி இழுத்தடிக்கிறது என்ற சந்தேகம் சாமானியர்களுக்கும் தோன்றியது. ஆனால், ரவிவர்மகுமார் அந்த இரு சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்து கடந்த வெள்ளிக்கிழமை அறிக்கை அளித்ததும், சட்ட அமைச்சர் ஜெயச்சந்திராவிடம் நிருபர்கள் இதுபற்றி கேட்டதற்கு, திங்கள்கிழமை நடைபெறும் அமைச்சரவையில் இதுகுறித்து விவாதிக்கப்படுமா என்பது தெரியாது என்றுதான் ஜெயச்சந்திரா கூறியிருந்தார்.
மேலிட சிக்னல்
இந்நிலையில், இரு நாட்களில், அதுவும் வீக் என்ட் நாட்களில், முடிவு செய்து, ஜெயலலிதா விவகாரத்தை அமைச்சரவை அஜென்டாவிலும் சேர்த்து, திங்கள்கிழமை அமைச்சரவையில், மேல்முறையீடு குறித்து முடிவெடுத்த காரணம் என்ன என்பது பற்றிபல்வேறு பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் முக்கியமானது, காங்கிரஸ் மேலிடத்தில் இருந்து காட்டப்பட்ட பச்சைக்கொடிதான் என்கின்றன பட்சிகள்.
காங்கிரஸ் எதிர்பார்ப்பு
ஜெயலலிதா அப்பீல் வழக்கு சட்டத்துறை சார்ந்ததை தாண்டி, அரசியல்மயமாகி விட்டதைத்தான், தமிழக எதிர்க்கட்சிகளின் கடிதங்கள், கர்நாடக அரசின் மவுனம் போன்றவை உணர்த்திவந்தன. அப்பீல் செய்யாமல் காரணம் காட்டி தப்பித்துவிட்டால், தங்களின் கைக்குள் ஜெயலலிதா வந்துவிடுவார் என்று காங்கிரஸ் மேலிடம் கருதியதாகவும், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தங்களுக்கு ஜெயலலிதா அணுசரனை செய்வார் என்று எதிர்பார்த்ததாகவும் கர்நாடக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால், எந்த ஒரு அசைவும், கார்டனில் இருந்து வரவில்லை என்பதுதான் காங். மேலிட அதிருப்திக்கு காரணம் என்கிறார்கள்.
அசைய கூடாது
கர்நாடக காங்கிரஸ் கட்சிக்குள் உள்ள அதிமுக அபிமானிகளான, மூத்த அமைச்சர் சிவகுமார் கோஷ்டி போன்ற சில கோஷ்டிகள் மேல்முறையீட்டை தடுத்தால் தடுக்கட்டும். அல்லது, மேல்முறையீட்டு விவகாரத்திற்காக, காங்கிரசின் அரசியல் நிர்பந்தம் எதற்கும், அசையக்கூடாது என்பது கார்டன் கட்டளை என்கின்றனர் கர்நாடக காங்கிரஸ் வட்டாரத்தில். இவ்வாறு கார்டன் உறுதி காட்ட காரணம், தாமரையை பிரியக்கூடாது என்பதுதானாம்.
உச்சநீதிமன்றத்தில் நீதி
காங்கிரசுடன் நெருக்கம் காட்டினால், தாமரை கட்சிக்கு ஆகாது என்பதால், தாமரையே நமது நண்பன் என்ற முடிவுக்கு கார்டன் வந்துவிட்டது. இதனால், காங்கிரஸ் காட்டிய எந்த பூச்சாண்டியும் இங்கு பலிக்கவில்லை. எப்படியும், நீதியை நிலைநாட்டி, உச்சநீதிமன்றத்திலும் வெற்றி பெறலாம். இக்கணித தவறையும் உச்சநீதிமன்றத்தில் சரி செய்துவிடலாம் என்ற நம்பிக்கை தாமரை மற்றும் கார்டனுக்கு உள்ளது. இந்த நம்பிக்கை இருக்கும்போது, ஏன் காங்கிரஸ் பூச்சாண்டிக்கு அஞ்ச வேண்டும் என்பதே நிலைப்பாடாம்.
அந்த அழைப்பு
இந்நிலையில்தான், காங். மேலிடத் தலைமையின் வலது கரமாக செயல்படும் அதிகாரம்மிக்க ஒருவரிடமிருந்து திங்கள்கிழமை காலையில், சித்தராமையாவுக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், அப்போது, பச்சைக்கொடி ஓங்கி அசைக்கப்பட்டதாகவும் கிசுகிசுக்கிறார்கள். இதையடுத்துதான், இனியும் தாமதிக்க வேண்டாம், தொடருவோம் வழக்கை என்ற முடிவுக்கு சித்து அன்டு டீம் வந்துள்ளதாம்.
மக்களிடம் நல்ல பெயர்
ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்யாமல் தவிக்க அரசியல் ரீதியாக எந்த ஆதாயமும் காங்கிரசுக்கு கிடைத்திருக்காது. ஆனால், தவிர்த்தாலோ, கர்நாடக மக்கள் மத்தியில் சித்தராமையா அரசு மீது தவறான பார்வை ஏற்பட்டுவிடும். எடியூரப்பா ஆட்சி காலத்தில், கனிம குவாரி முறைகேடு பிரச்சினைக்காக 350 கிலோமீட்டர் பாத யாத்திரை சென்றவர் அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த சித்தராமையா. தற்போது, ஜெ. வழக்கில் மேல்முறையீடு செய்யாவிட்டால், இரட்டை நிலைப்பாடுடையவராக சித்து பார்க்கப்படுவார். எனவே, இந்த வழக்கை மக்களிடம் நற்பெயரை ஈட்ட கர்நாடக அரசு பயன்படுத்திக்கொண்டது.