ஊதிய உயர்வை எதிர்பார்த்துள்ளீர்களா?: முதலில் இதைப் படிங்க!
பெங்களூர்: இந்த ஆண்டு பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு 10.5 முதல் 12 சதவீதம் வரை ஊதிய உயர்வு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு அலுவலகங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் ஊதிய உயர்வை எதிர்பார்த்து உள்ளனர். இந்நிலையில் டீம்லீஸ் சர்வீசஸ் நிறுவனம் ஊதிய உயர்வு குறித்து நடத்திய ஆய்வின் முடிவு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதத்தில் உள்ளது.
அந்த ஆய்வு முடிவின் விவரம் வருமாறு,
ஊதிய உயர்வு
இந்த ஆண்டு ஊதிய உயர்வை எதிர்பார்த்திருக்கும் ஊழியர்களுக்கு இரட்டை இலக்க சதவீதத்தில் அதாவது 10.5 முதல் 12 சதவீதம் வரை ஊதிய உயர்வு கிடைக்கும். இந்த சதவீதம் பல்வேறு துறை ஊழியர்களுக்கும் பொருந்தும்.
ஊதியம்
வியாபார உலகில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், அரசின் சரியான நடவடிக்கைகளால் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதுடன் இந்த ஆண்டு ஊதிய உயர்வின் சதவீதமும் அதிகரித்துள்ளது என்று டீம்லீஸ் சர்வீசஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர் ரிதுபர்னா சக்ரபர்த்தி தெரிவித்துள்ளார்.
தொலைதொடர்புத் துறை
ரீடெய்ல் மற்றும் தொலைதொடர்புத் துறை ஊழியர்களுக்கு இந்த ஆண்டு 12 முதல் 15 சதவீதம் வரை ஊதிய உயர்வு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடகம், மின்சாரம், சுகாதாரம், ஃபார்மா, எப்.எம்.சி.ஜி. துறைகள் இந்த ஆண்டு நல்ல முன்னேற்றம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை
அதிக ஊதியம் வழங்கும் நகரமாக மும்பை உள்ளது. ஒன்று அல்ல இரண்டு அல்ல 7 துறைகளில் அதிக ஊதியம் வழங்கும் நகரமாக மும்பை உள்ளது. நான்கு துறைகளில் அதிகம் ஊதியம் வழங்கும் நகரமாக டெல்லியும், ஒரேயொரு துறையில் அதிகம் ஊதியம் வழங்கும் நகரமாக பெங்களூரும் உள்ளது.