சாரயம் குடிங்க மாணவர்களே… போதை வாத்தியாரின் பாடம் இது!
ராய்ப்பூர்: டி ஃபார் டாடி... பி ஃபார் பாட் என்றுதானே நாம் படித்திருப்போம், ஆனால் ஃபுல் போதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் ஒருவர் 'டாரு' (சாராயம்), 'பீயோ' (குடியுங்கள்) என, வகுப்பறையில் இருந்த போர்டில் எழுதிப்போட்டு பாடம் நடத்தியுள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
போதை ஆசாமியின் பெயர் சிவ்பரண் என்பதாகும். இவர் சத்தீஸ்கர் மாநிலம், கோரியா மாவட்டத்தைச் சேர்ந்த ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 10ம் தேதி, குடித்து விட்டு பள்ளிக்கு வந்தார். போதையில் தள்ளாடியபடியே வந்த இவர், நேராக போர்டில் போய், 'டாரு' (சாராயம்), 'பீயோ' (குடியுங்கள்) என, எழுதினார்.

மாணவர்கள் பத்துவயதிற்கு உட்பட்டவர்கள்தான். எனவே மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனாலும் அசராத அந்த ஆசிரியர், தான் எழுதிப்போட்ட வார்த்தைகளை பலமுறை எழுதுமாறு மாணவர்களிடம் கூறியுள்ளார்.
இதனை உள்ளூர் செய்தியாளர் ஒருவர் வீடியோ படம் எடுத்தார். அவரிடமே அந்த ஆசிரியர் திரும்ப திரும்ப குடிக்கும் பேச்சையே பேசினார். பள்ளிக்கு தற்போது குடித்து விட்டு வந்ததாகவும், இதற்கு முன்பும் பலமுறை குடித்து விட்டு வந்துள்ளதாகவும் சிவ்பரண், பெருமிதம் பொங்க கூறினார். இந்தக் காட்சி வீடியோவில் பதிவாகி உள்ளது.
குடிகார ஆசிரியரின் செயல்களை வீடியோவில் பார்த்த, சத்தீஸ்கர் மாநில பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து, கோரியா மாவட்ட கல்வி அதிகாரிகள், 'சம்பவம் குறித்து விசாரணை செய்து, தக்க நடவடிக்கை எடுப்போம்,' எனத் தெரிவித்தனர்.
ஆசிரியர் சிவ்பரணை செய்தியாளர்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது, ''எப்போதோ குடிப்பழக்கத்தை விட்டு விட்டேன். குடித்து விட்டு வருவது தவறு தான். இனி குடித்து விட்டு ஒருபோதும் பள்ளிக்கு வரமாட்டேன்,'' என்று அசால்டாக கூறுகிறார்.












Click it and Unblock the Notifications