டெல்லி, ராஜஸ்தான், ம.பி., மிசோரம், சத்தீஸ்கருக்கு நவம்பரில் தேர்தல்: அடுத்த வாரம் தேதி அறிவிப்பு!
டெல்லி: டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்பட இருக்கிறது.
டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் முடிவடைதால் தேர்தலுக்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
இந்த தேர்தலை நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் சத்தீஸ்கர் மாநிலம் மட்டும் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாநிலமாகும். எனவே அந்த மாநிலத்தில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் இரண்டு கட்டங்களாக வாக்குப் பதிவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 4 மாநிலங்களிலும் ஒரே நாளில் வாக்குப் பதிவை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இத் தேர்தல் தேதிக்கான அறிவிப்புகள் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய பிரதேசத்தில்..
மத்திய பிரதேசத்தில் 230 தொகுதிகள் உள்ளன. இங்கு பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. மீண்டும் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் என்று கருத்து கணிப்புகள் கூறியுள்ளன.
சத்தீஸ்கர் மாநிலத்தில்..
பா.ஜ.க. ஆட்சி நடக்கும் சத்தீஸ்கர் மாநிலத்தில் 90 தொகுதிகள் உள்ளன. இங்கு முதல்வர் ராமன்சிங்குக்கு தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது. இருப்பினும் ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் கட்சி மும்முரம் காட்டி வருகிறது.
குடைச்சல் கெஜ்ரிவால்
70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபையில் காங்கிரஸ் முதல்வராக ஷீலாதீட்சித் உள்ளார். டெல்லி தேர்தலில் கெஜ்ரிவாவின் புதிய கட்சி கணிசமாக வாக்குகளை பிரிக்கும் என்பதால் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
ராஜஸ்தானில்..
200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக்கெலட் முதல்வராக உள்ளார். அவரிடம் இருந்து பொறுப்பை பறிக்க வசுந்த ராஜேசிந்தியா தலைமையிலான பா.ஜ.க.வினர் பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.
மிசோரமில்..
40 தொகுதிகள் கொண்ட மிசோரம் மாநிலத்தில் காங்கிரஸ் முதல்வராக பூ லல்தான்வலா உள்ளார். அங்கு பா.ஜ.க.வுக்கு அதிக செல்வாக்கு இல்லை. மீண்டும் காங்கிரசே ஆட்சியைக் கைப்பற்றக் கூடும்.
லோக்சபாவுக்கு அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த 5 மாநில தேர்தல் பொதுத் தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.