உச்சத்தில் கொரோனா... மேற்கு வங்கத்தில் பிரசாரங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்.. தேர்தல் ஆணையம் அதிரடி
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் வாகன பேரணி போன்ற பிரச்சாரங்களுக்குத் தடை உள்ளிட்ட பல புதிய கட்டுப்பாடுகளைத் தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. தற்போது வரை மேற்கு வங்கத்தில் ஆறு கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. தேர்தல் பிரசாரங்கள் காரணமாக கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பலரும் வலியுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில் மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரங்களுக்குப் பல புதிய கட்டுப்பாடுகளைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் அரசியல் பேரணிகளில் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றாதது குறித்து வேதனை தெரிவித்த தேர்தல் ஆணையம், அனைத்து விதமான பேரணிகளுக்கும் முழுமையான தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. பேரணிகளுக்கு முன்பு அனுமதி அளிக்கப்பட்டிருந்தால், அது திரும்பப் பெறப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுக்கூட்டங்களிலும் 500 பேருக்கு மேற்பட்டவர்கள் கலந்துகொள்ளக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகள் அனைத்தும் நேற்று இரவு 7 மணிக்கு அமலுக்கு வந்ததாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Recommended Video
முன்னதாக, கொரோனா பரவல் காரணமாகக் கடைசி மூன்று கட்ட தேர்தலையும் ஒரே கட்டமாக நடத்துமாறு தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் காங்கிரஸ் வலியுறுத்தியிருந்தது. இருப்பினும், அந்த கோரிக்கையைத் தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.