கர்நாடக தேர்தல் தேதி பாஜகவிற்கு கசிந்தது எப்படி?... விசாரணைக்கு ஆணையம் உத்தரவு!
Recommended Video
டெல்லி : கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் தேதியை ஆணையம் அறிவிக்கும் முன்னரே பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் வெளியிட்ட விவகாரம் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையம் ஒரு குழுவை அமைத்துள்ளது.
கர்நாடக மாநில சட்டசபைக்கான காலக்கெடு முடிவதையொட்டி அந்த மாநிலத்திற்கு தேர்தல் நடத்துவதற்கான தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டன. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் இதற்கான சட்டப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், தலைமைத் தேர்தல் ஆணையர் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னரே பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாள்வியா கர்நாடக சட்டசபைக்கு 12-ம் தேதி என்றும்,18ம் தேதி வாக்கு எண்ணிக்கை என்றும் பதிவிட்டார். பின்னர் வாக்கு எண்ணிக்கை தேதியை திருத்தி 15-ம் தேதி என்றும் பதிவிட்டார்.
தேர்தல் ஆணையம் அறிவிக்கும் முன்னரே பாஜகவினருக்கு எப்படி தேர்தல் தேதி தெரிந்தது என்று இந்த விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தன.
இதையடுத்து, தேர்தல் தேதி கசிந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ராவத், தேர்தல் தேதி கசிந்தவிவகாரம் மிகவும் தீவிரமானது. இது குறித்து விரைவாக விசாரணை நடத்தப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இந்நிலையில், தேர்தல் தேதி முன்கூட்டியே கசிந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் இலாகா ரீதியாக விசாரணை நடத்தி ஒருவாரத்துக்குள் அறிக்கை அளிப்பார்கள். அதுமட்டுமல்லாமல், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளையும், பரிந்துரை செய்யும் என்றும் தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது.