எமெர்ஜென்சி.. இந்திரா மீது தவறில்லை, மேனகா காந்தி எல்லாம் அறிவார்: மாஜி உதவியாளர் திடுக்
டெல்லி: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை கொண்டு வர யார் காரணம் என்ற ரகசியத்தை அவரது முன்னாள் உதவியாளர் ஆர்.கே.தவான் தற்போது வெளியிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, 1975ம் ஆண்டு, ஜூன் மாதம் 25ம் தேதி நெருக்கடி நிலையை கொண்டு வந்தார். நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டு, இன்று 25ம் தேதியோடு, 40 ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளது. அந்த காலகட்டத்தில் இந்திரா காந்தியின் தனிப்பட்ட உதவியாளராக இருந்து, அதிகாரமிக்கவராக வலம் வந்தவர் ஆர்.கே.தவான். அவர், நெருக்கடி கால நினைவுகளை டி.வி சேனல் பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டார்.
வழக்கு
அப்போது அவர் கூறியதாவது: 1971ம் ஆண்டு தேர்தலில், ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி ராஜ்நாராயண் அலகாபாத் ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கை விசாரித்து, ‘இந்திரா வெற்றி பெற்றது செல்லாது. அவர் 6 ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாது என 1975ம் ஆண்டு, ஜூன் 12ம் தேதி அலகாபாத் ஹைகோர்ட்டு நீதிபதி ஜகமோகன் லால் சின்கா தீர்ப்பு அளித்தார்.
ராஜினாமா கடிதம்
இதையடுத்து, இந்திரா காந்தி பதவி விலக தயார் ஆனார். ராஜினாமா கடிதமும் டைப் செய்யப்பட்டு கையெழுத்துக்காக காத்திருந்தது. இந்நிலையில், ஜெகஜீவன்ராம் தலைமையில் அமைச்சர்கள் அனைவரும் இந்திராவை சந்தித்து, அவர் பதவி விலகக்கூடாது என வற்புறுத்தினர். இதையடுத்து அவர் ராஜினாமா முடிவை இந்திரா ஒத்திப்போட்டார்.
நெருக்கடி ஆலோசனை
இந்த சூழ்நிலையில், இந்திராவை காப்பாற்ற, நெருக்கடி நிலையை அமல்படுத்த வேண்டும் என்ற யோசனையை அப்போதைய மேற்கு வங்க முதல்வர், சித்தார்த்த சங்கர்ரே கடிதமாக எழுதி தெரிவித்தார். அதன்பின்னர் இந்திரா காந்தியும், சித்தார்த்த சங்கர்ரேயும் அப்போதைய ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதுவை சந்தித்தனர். நெருக்கடி நிலையை பிரகடனம் செய்ய வேண்டும் என அவர்கள் விருப்பம் தெரிவித்தனர். ஜனாதிபதியும் அதை ஏற்றார். நெருக்கடி நிலை பிரகடன வரைவை தயார் செய்யும்படி, சித்தார்த்த சங்கர்ரேயை ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். அவரும் தயார் செய்து கொடுத்தார். நள்ளிரவுக்குமுன், நான்தான் அந்த வரைவை ஜனாதிபதி கையெழுத்திடுவதற்காக ஜனாதிபதி மாளிகைக்கு எடுத்துச்சென்றேன்.
தோல்வி
நெருக்கடி நிலையை தொடர்ந்து, இந்திராவுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. இருப்பினும், 340 தொகுதிகள் வரை ஜெயிக்க முடியும் என்று உளவுத்துறை அறிக்கை அளித்தது. எனவே 1977ல் பொதுத்தேர்தலை இந்திரா காந்தி அறிவித்தார். அந்த தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார். அந்த செய்தியை, அவரிடம் நான்தான் கூறினேன்.
துணிவு
அப்போது அவர் இரவு உணவு சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அவரது முகத்தில் ஒரு நிம்மதியை பார்க்க முடிந்தது. "இனி எனக்கும், குடும்பத்துக்கும் நேரம் செலவிட முடியும் என கூறினார். ஆயினும் அடுத்த 3 ஆண்டுகள் அவருக்கு கஷ்ட காலமாகவே இருந்தது. எதிர்க்கட்சியாக இருக்க வேண்டியதாயிற்று. அவர் அடிக்கடி வருத்தத்துடன் காணப்பட்டார். ஆனால் அவர் ஒருபோதும் அழுதது இல்லை. வருத்தத்துக்கு மத்தியிலும் மிகவும் துணிவுடன் இருந்தார். எதிர்த்து நின்று போராடுவதில் உறுதியாக இருந்தார். இவ்வாறு தவான் கூறியுள்ளார்.
சஞ்சய்காந்தி அறிவார்
மேலும், நெருக்கடி நிலை குறித்து ராஜிவ்காந்திக்கு கூட இந்திராவின் நடவடிக்கை தெரியாது. ஆனால் ராஜிவ் சகோதரரான மறைந்த, சஞ்சய்காந்திக்கு அதுகுறித்து நன்கு தெரியும். சஞ்சய்காந்தியின் மனைவி மேனகா காந்தியும் அறிவார். எனவே, அவர் தனக்கு ஒன்றும் தெரியாது என்று கூற முடியாது என்றார். மேனகா காந்தி தற்போது பாஜகவில் உள்ளார். பாஜக தலைவர்கள் பலரும் நெருக்கடி நிலையின்போது ஜெயிலில் அடைக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.