சவுதி ஒட்டக பண்ணையில் அடிமைத் தொழிலாளியாக விற்கப்பட்ட கொல்கத்தா இன்ஜீனியர்!
கொல்கத்தா: சவுதி அரேபியாவுக்கு நல்ல வேலை தேடிச் சென்று அங்கு ஒட்டக பண்ணையில் அடிமைத் தொழிலாளியாக விற்கப்பட்ட கொல்கத்தாவைச் சேர்ந்த அட்டோ மொபைல் இன்ஜீனியரை மீட்டுத் தரக் கோரி அவரது உறவினர்கள் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தை அணுகி உள்ளனர்.
ஜெயந்தா பிஸ்வாஸ் என்ற அந்த என்ஜீனியரின் உறவினர்கள் அவரை மீட்டு இந்தியா கொண்டுவர வெளியுறவுத் துறை அமைச்சகத்தை அணுகியதாகவும், இருப்பினும், வெளியுறவுத்துறை தரப்பில் இருந்து எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சவுதியில் சிக்கியுள்ள என்ஜீனியரின் மூத்த சகோதரி கவுரி பிஸ்வாஸ் கூறியிருப்பதாவது, எங்களது முயற்சிக்கு வெளியுறவுத்துறையிடம் இருந்து உரிய பலன் கிடைக்கவில்லை. சவுதியில் நல்ல வேலை தேடித்தருவதாக கூறி ஜெயந்த் பிஸ்வாஸ் டெல்லி, மும்பை முகவர்கள் மூலமாக அங்கு சுற்றுலா விசாவில் அனுப்பி வைக்கப்பட்டார்.
அந்த முகவர்கள் ஒரு லட்சம் பெற்றுக்கொண்டு சவுதி ஆட்டோ மொபைல் துறையில் 3 மாத காலத்திற்குள் பிளம்பிக் வேலை தேடித் தருவதாக உத்தரவாதம் அளித்து அனுப்பி வைத்தனர். கடந்த மே மாதம் 15-ம் தேதி ஜெயந்த், ரியாத் சென்றடைந்தார்.
ஆனால், அங்கு சவுதி நாட்டவரிடம் ஒட்டக பண்ணையில் அடிமை வேலை செய்ய ஜெயந்த் பிஸ்வாலை விற்றுவிட்டனர். அந்த பண்ணையில் கூலி வேலை செய்ய அவரை நிர்பந்திப்பதாகவும், ஒரு வேளை சாப்பாடு மட்டுமே வழங்கி கொடுமை படுத்துவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
அந்த பண்ணையில் அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாகவும், அங்கிருந்து தப்பிக்க முயன்ற ஜெயந்த் பிஸ்வாலை அடித்து கொடுமைப்படுத்தி வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அதன்பின்னர் மீண்டும் தப்பிச் சென்ற அவர் இந்திய தூதரகத்தை அணுகி உதவி கேட்டுள்ளார். அவர்கள் அங்குள்ள தொண்டு நிறுவனத்துக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், தப்பிச் சென்ற ஜெயந்த் பிஸ்வால் 10 ஆயிரம் ரியால் திருடிவிட்டதாக அந்நாட்டு போலீசில் ஒட்டக பண்ணை நிறுவனத்தினர் புகார் அளித்தின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த தகவலின்பேரில் முகவர்கள் மூலமாக ரூபாய் 35 ஆயிரம் செலுத்தி அக்டோபர் 27-ம் தேதி சிறையில் இருந்து ஜெயந்த் பிஸ்வால் விடுவிக்கப்பட்டார்.
இருப்பினும், அவர் எப்போது நாடு திரும்புவார் என்று எந்தவிதமான தகவலும் கிடைக்காமல் தவித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, ஜெயந்த் பிஸ்வாலை மீட்டுத் தர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவுரி பிஸ்வால் கேட்டுக் கொண்டுள்ளார்.