ஓபிஎஸ், ஈபிஎஸ் மாறி மாறி திருப்பதி ஏழுமலையானை சரணடைந்த காரணம் இதுதானாமே?
திருப்பதி ஏழுமலையானை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வமும் மாறி மாறி தரிசித்து வருகின்றனர்.
Recommended Video
திருப்பதி: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் திருப்பதி ஏழுமலையானை மாறி மாறி தரிசனம் செய்வதற்கான பின்னணி காரணம் வெளியாகியுள்ளது.
சிவாஜி கணேசன் மணிமண்டபம் திறப்பு விழா முடிந்த உடன் ஈபிஎஸ், ஓபிஎஸ் ஏழுமலையானை சரணடைந்த காரணம், பதவியை காப்பாற்றிக்கொள்ளத்தானாம்.
சிவாஜி சென்டிமெண்ட் பற்றி ஜோதிடர்கள் எச்சரித்ததே இந்த ஆன்மீக பயணத்திற்குக் காரணம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிவாஜியும் திருப்பதி ஏழுமலையானும்
திராவிட இயக்கத்தின் முன்னணிக் கலைஞராக வளர்ந்த சிவாஜி கணேசன் கடந்த 1955 இல் திடீரென திருப்பதி சென்று வழிபட்டார். அப்போது திமுகவினர், திருப்பதி கணேசா! திரும்பிப் பார் நடந்துவந்த பாதையை, நன்றி கெட்டுப்போனாயே நல்லதுதானா?என்று கேட்டனர். இது சிவாஜிக்கு பெரும் சிக்கலை உண்டாக்கியது. இப்போது சிவாஜி மணிமண்டபத்தை திறந்து விட்டு முதல்வரும், துணைமுதல்வரும் திருப்பதி சென்று வந்துள்ளனர்.
சிவாஜி சிலை அகற்றம்
சிவாஜி சிலையை கடற்கரையிலிருந்து அ.தி.மு.க. ஆட்சியில்தான் அகற்றப்பட்டது. நீதிமன்ற உத்தரவு என்றாலும் சில அரசியல் காரணங்களுக்காகத்தான் சிவாஜி சிலை அங்கிருந்து அகற்றப்பட்டது. இதனால் அதிமுக மீது சிவாஜி குடும்பத்தினர், ரசிகர்கள் அதிருப்தியில் இருந்தனர். சிவாஜிக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி அடையாறில் மணி மண்டபம் அமைக்கப்பட்டு அதில் சிவாஜி சிலை நிறுவப்பட்டது.
சிவாஜி மணிமண்டபம்
நடிகர் சிவாஜி மணிமண்டப திறப்பு விழா அக்டோபர் 1ஆம் சென்னை அடையாறில் நடந்தது. விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விழாவில் பங்கேற்கவில்லை.
அரசியல்வாதிகளின் சிவாஜி சென்டிமெண்ட்
சிவாஜி சிலையை கருணாநிதி திறந்துவைத்தப்பிறகு அவருக்கு அடுத்தடுத்து சோதனை வந்ததாக தி.மு.க.வினர் தரப்பில் ஒரு பேச்சு உள்ளது. அந்த சென்டிமெண்ட் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியுள்ளனர். சிவாஜி மணி மண்டபத்தை திறந்து வைத்தால், பதவிக்கு ஆபத்து என ஜோதிடர்கள் சொன்னதால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்த விழாவுக்குச் செல்வதைத் தவிர்த்துவிட்டாராம்.
பரிகாரம் கேட்ட ஓபிஎஸ்
சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவுக்கு துணை முதல்வரான பன்னீர் செல்வத்தை அனுப்பிவிட்டார் எடப்பாடியார். ஆனாலும் அசராத ஓபிஎஸ்... எவ்வளவோ பார்த்துட்டோம் இதை பார்க்கமாட்டோமா? பரிகாரம் பண்ணிடுவோம் என்று கூறினாராம்.
ஏழுமலையானை தரிசித்த ஓபிஎஸ்
மணிமண்டபத்தை திறந்து வைத்ததால் உடனே திருப்பதிக்கு போய் வெங்கடாஜலபதியை ஒரு தடவை தரிசனம் பண்ணிட்டு வந்துடுங்க. எந்த தோஷமாக இருந்தாலும் அது ஓடியோ போய்விடும் என்றார்களாம் ஜோதிடர்கள். உடனே திருப்பதிக்கு குடும்பத்தோடு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார் பன்னீர் செல்வம்
ஈபிஎஸ் திருப்பதி பயணம்
மணிமண்டபமும், சிவாஜி சிலையும் தான் முதல்வராக இருந்ததால் திறந்து வைக்கப்பட்டதால் எடப்பாடி பழனிச்சாமியும், குடும்பத்துடன் திருப்பதி சென்று குடும்பத்துடன் ஏழுமலையானை வழிபட்டுள்ளார்.
ஏழுமலையானின் பார்வை
ஏழுமலையானை தரிசித்த பின்னர் பேட்டி கொடுத்த எடப்பாடியார், கடந்த முறை திருப்பதி வந்தபோது தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவியது. அப்போது தமிழகத்தில் மழை பெய்ய வேண்டும் என வேண்டிக்கொண்டேன். தற்போது தமிழகத்தில் மழை பெய்து ஏரி, குளங்கள் நிரம்பியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.
எடப்பாடியாரின் ஆன்மீக சுற்றுலா
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மயிலாடுதுறையில் காவிரி மஹாபுஷ்கர விழாவில் பங்கேற்று புனித நீராடினார். இன்று திருப்பதியில் தரிசனம் செய்துள்ளார். இது ஆட்சியைக் காப்பாற்ற எடப்பாடியாரின் ஆன்மீக சுற்றுலா என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.