ஓய்வூதியம்: மோடி அரசுக்கு எதிராக முன்னாள் ராணுவத்தினர் போராட்டம்- பதக்கங்கள் எரிப்பால் பதற்றம்!!
டெல்லி: மத்திய அரசு அறிவித்த ஒரு பதவி ஒரு ஓய்வூதிய திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைய கோரி டெல்லியில் ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணி நடத்த முயன்ற முன்னாள் ராணுவத்தினர் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது முன்னாள் ராணுவ வீரர்கள் சிலர் பதக்கங்களை எரிக்க முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது.
ராணுவத்தில் பதவி வகித்த அனைவருக்கும் சமமான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது முன்னாள் ராணுவ வீரர்கள் கோரிக்கை. இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்பதாக அறிவிக்கை வெளியிட்டது.
Ex-servicemen march to President's House over the issue of #OROP, stopped by Police pic.twitter.com/5bbeE6jlmc
— ANI (@ANI_news) November 11, 2015
ஆனால் இந்த அறிவிக்கையில் குறைபாடுகள் இருக்கின்றன என்பது ராணுவ வீரர்களின் குற்றச்சாட்டு. இதனை மத்திய அரசு களைய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் 2,000 முன்னாள் ராணுவ வீரர்கள் தங்களது பதக்கங்களை அரசிடம் திரும்ப ஒப்படைத்தனர். இந்நிலையில் இன்று தங்களது கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியில் ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணியாக செல்லவும் முன்னாள் ராணுவ வீரர்கள் முயற்சித்தனர்.
ஆனால் இந்த பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது முன்னாள் ராணுவத்தினர் சிலர் தங்களுக்கு அரசு வழங்கிய பதக்கங்களை எரிக்க முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது.
நாட்டில் சகிப்பின்மைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி விருதுகளை திருப்பிக் கொடுத்த கலைஞர்கள், கல்வியாளர்கள், விஞ்ஞானிகளை போலி கல்வியாளர்கள் என விமர்சித்தவர்கள், இந்த ராணுவத்தினரையும் போலியானவர்கள் என சொல்வார்களோ?