கேஜ்ரிவால் அரசுக்கான ஆதரவு வாபஸ்- ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார் பின்னி
டெல்லி: அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி ஆம் ஆத்மி அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. வினோத் குமார் பின்னி, ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை எதிர்த்து அவரது கட்சியை சேர்ந்த வினோத் குமார் பின்னி எம்.எல்.ஏ. போர்க் கொடி தூக்கினார். தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கேஜ்ரிவால் தவறிவிட்டதாக அவர் புகார் கூறினார்.
ஆனால் அமைச்சர் பதவி தராத கோபத்திலும் லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதாலுமே பின்னி கலகக் குரல் எழுப்பியதாக ஆம் ஆத்மி கட்சியினர் பதிலடி கொடுத்தனர். இந்நிலையில் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என கேஜ்ரிவால் அரசுக்கு பின்னி கெடு விதித்துப் பார்த்தார்.
தம்முடன் மேலும் பல எம்.எல்.ஏக்கள் வருவார்கள் என்று மிரட்டிப் பார்த்தார் பின்னி. ஆனால் எதுவும் நடக்கவில்லை. இதனால் தாம் அறிவித்தபடி, ஆம் ஆத்மி அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறும் கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். இதை பின்னி செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார்.