அரசு விளம்பரத்தில் ஜெயலலிதா படம்... கண்காணிப்பு குழு ஏன் அமைக்கவில்லை என உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி : அரசு விளம்பரங்களிள் கட்சித் தலைவர்களின் புகைப்படங்கள் வெளியிடப்படுவதைக் கட்டுப்படுத்த 3 நபர் குழுவை ஏன் நியமிக்கவில்லை என கேட்டு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
என்.ஜி.ஓ. பொதுநல மனு மையம், தாக்கல் செய்திருந்த மனுவில் அரசு விளம்பரங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழகத்தின் அதிமுக கட்சியும், டெல்லியின் ஆம் ஆத்மி கட்சியும், மீறியுள்ளது என்றும், இதனால் இந்த இருகட்சிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட வேண்டும் என்று முறையிட்டிருந்தது.
இந்த மனு நேற்று நீதிபதிகள் ரஞ்சன் கோகோய் மற்றும் என்.வி.ரமணா அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, என்.ஜி.ஓ. சார்பாக ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் டெல்லி அரசும் தமிழக அரசும் உச்ச நீதிமன்ற விதிமுறைகளை தெளிவாகவும் நேரடியாகவும் மீறியுள்ளன என்றார்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகேஷ் துவேதி எதிர்த்த போது, கோபமடைந்த நீதிபதிகள், "நாங்கள் இன்னமும் நோட்டீஸ் அனுப்பாதபோது எங்களை எதற்காக தூண்டுகிறீர்கள்?" என்று கோபமாகக் குறுக்கிட்டனர்.
3 நபர் குழு மட்டுமே இதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியும், 3 நபர் கட்டுப்பாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதே இப்போது கேள்வி என்று நீதிபதிகள் கூற அதற்கு பிரசாந்த் பூஷன், "அந்தக் கட்டுப்பாட்டுக் குழுவுக்கு அவதூறு வழக்கு தொடர்வதற்கான அதிகாரம் இல்லை" என்பதை சுட்டிக் காட்டினார்.
இதையடுத்து, நீதிபதிகள் எங்களது உத்தரவைப் பின்பற்றி 3 நபர் குழு நிறுவப்பட்டுள்ளதா அல்லது இல்லையா என்பதற்கு பதில் அளிக்குமாறும் நிறுவப்படவில்லையெனில் ஏன் அவ்வாறு செய்யவில்லை என்பதற்கான விளக்கங்களைக் கேட்டும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பில், அரசு விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர், தலைமை நீதிபதி நீங்கலாக, கட்சித் தலைவர்களின் படங்கள் வெளியிடக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தது.
மேலும், இதனைக் கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் மத்திய அரசு 3 நபர் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.