குஜராத் கடற்படை தளம் அருகே பயங்கர சத்தத்துடன் வெடித்த பட்டாசால் வெடிகுண்டு பீதி #Borbandar
காந்திநகர்: குஜராத் கடற்படைத் தளம் அருகே வெடிகுண்டு வெடித்ததை போன்ற, பலத்த சத்தம் கேட்டநிலையில் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பார்த்தபோது அது பட்டாசு என தெரியவந்தது.
குஜராத் மாநிலம், போர்பந்தரில் உள்ள கடற்படைத் தளம் அருகே இன்று மதியம் 1 மணியளவில் பெரும் சத்தம் ஒன்று கேட்டது. குண்டு வெடிப்பால் இந்த சத்தம் எழுந்தது என சந்தேகிக்கும் அளவுக்கு அந்த சத்தம் இருந்தது.
இதையடுத்து பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். யூரியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு இந்தியா பதிலடி தாக்குதல் நடத்தியது. இதனால் தீவிரவாதிகள் நாட்டின் முக்கிய பகுதிகளில் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ள நிலையில், இந்த சத்தம் பெரும் பீதியை ஏற்படுத்தியது.
இருப்பினும், இது பட்டாசு சத்தம் என கடற்படை அறிவித்துள்ளது. சம்பவ இடத்தில் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.