கருத்தை வெளிப்படுத்த வன்முறை வழி கிடையாது: அருண் ஜேட்லி எச்சரிக்கை
டெல்லி: நாட்டில் நடைபெறும் சகிப்புத்தன்மையற்ற சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, கருத்துக்களை வெளிப்படுத்த வன்முறையற்ற வழிகள் உள்ளன என்று கூறியுள்ளார்.
மாட்டிறைச்சி சாப்பிடுவோருக்கு எதிரான தாக்குதல், பாகிஸ்தான் நாட்டுடன் தொடர்புள்ளோருக்கு எதிரான தாக்குதல் என நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆளும் தரப்பில் இருந்து வலிமையான குரல் வராதது, இந்த சகிப்புத்தன்மையற்ற செயல்களுக்கு ஊக்கம் தருகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று கூறியதாவது: தங்கள் கருத்தை வன்முறையின் வழியாக தெரிவிப்பது அதிருப்தியளிக்கிறது. இதுபோன்ற வன்முறைகள் வெளிப்படையாக காட்சிப்படுத்தப்படுகிறது. இதை பார்த்து, ஊக்கம் பெறும் மேலும் பலரும் வன்முறையை தொடருகிறார்கள்.
வலதுசாரி அமைப்புகள் இதுபோன்ற வன்முறையாளர்களிடமிருந்து தங்களை விலக்கியே வைத்திருக்க வேண்டும். சில விவகாரங்கள் மிகவும் மோசமாக உள்ளன. சில விஷயங்கள், மதங்களுக்கு நடுவே, பிளவை உருவாக்கிவிடும். ஜம்மு காஷ்மீர் போன்ற பதற்றமான பகுதிகளிலும் இது எதிரொலித்துவிடும் என்றார்.