குரங்கு கூட்டத்திற்கு மத்தியில் குடும்பம் நடத்த முடியாது: கணவர் வீட்டை விட்டு வெளியேறிய பெண்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் குரங்குகளின் தொல்லை தாங்க முடியாமல் பெண் ஒருவர் தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு கணவர் வீ்ட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள பக்பாரா பகுதியைச் சேர்ந்தவர் ராணி. அவரது கணவர் பாசில். அவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் அவர்களின் வீடு இருக்கும் பகுதியில் குரங்குகள் கூட்டம் கூட்டமாக வந்து தினமும் தொல்லை கொடுத்து வருகின்றன.
குரங்குத் தொல்லைய பொறுக்க முடியாமல் ராணி குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இது குறித்து ராணி கூறுகையில்,
என் கணவர் வீடு உள்ள பகுதியில் குரங்குத் தொல்லை அதிகம். தினமும் குரங்குகள் வந்து வீட்டுக்குள் புகுந்துவிடுகின்றன. ஆடையை காய வைத்தால் எடுத்துச் செல்கின்றன. வீட்டுக்குள் வந்து என் 5 மாத குழந்தையை காயப்படுத்தப் பார்க்கின்றன.
குரங்குகளுக்கு மத்தியில் இனியும் வாழ முடியாது என்று என் கணவர் வீட்டை விட்டு வந்துவிட்டேன். குரங்கு பிரச்சனை தீர்ந்தால் மட்டுமே அங்கு மீண்டும் செல்வேன். குரங்கு பிரச்சனை குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தாகிவிட்டது என்றார்.