உபி, மணிப்பூரில் ஆட்சியை பிடிக்கப் போவது யார்… இறுதி கட்ட விறுவிறு வாக்குப்பதிவு
உத்தரப் பிரதேசம் மற்றும் மணிப்பூர் சட்டசபை தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நேர நிலவரப்படி உபியில் 22.24 சதவீத வாக்குகளும் மணிப்பூரில
டெல்லி: உத்தரப் பிரதேசம் மற்றும் மணிப்பூர் சட்டசபை தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தல் 6 கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில் 7வது கட்டமாகவும் இறுதியாகவும் இன்று நடைபெற்று வருகிறது. முதல் ஆறு கட்டத் தேர்தல்களில் முறையே 64%, 65%, 61%, 61%, 57%, 57% என வாக்குகள் பதிவாகின.
இதனைத் தொடர்ந்து இன்று வாராணசி, காஜிப்பூர், ஜான்பூர், பதோஹி, துத்தி, ராபர்ட்ஸ்கஞ்ச், தக்கியா ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 40 தொகுதிகளுக்கான இறுதிக்கட்ட கட்ட வாக்குப் பதிவு இன்று நடைபெற்று வருகிறது. 11 மணி நேர நிலவரப்படி 22.24 சதவீத வாக்குகள் இந்தத் தொகுதிகளில் பதிவாகியுள்ளன.
மோடி தொகுதி
உத்தரபிரதேசத்தில் நடைபெறும் இந்த தேர்தலில் பிரதமர் மோடியின் தொகுதியான வாராணசிக்குட்பட்ட தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதனால், இந்தத் தேர்தல் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.
மணிப்பூர்
உத்தரபிரதேசத்தைப் போன்றே மணிப்பூரிலும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மணிப்பூரில் 22 தொகுதிகளுக்கும் இறுதிகட்ட வாக்குப்பதிவு 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விறு விறு வாக்குப் பதிவு
மணிப்பூரில் மொத்தம் 40 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இந்த 40 தொகுதிகளிலும் 14 ஆயிரத்து 458 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இறுதிகட்டத் தேர்தலில் வாக்காளர்கள் உற்சாகமாக வாக்களித்து வருகின்றனர். 11 மணி நேர நிலவரப்படி 45 சதவீத வாக்குகள் இங்கு பதிவாகியுள்ளன.
நக்சல் பகுதியில் தேர்தல்
இதில் நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக துத்தி, ராபர்ட்ஸ்கஞ்ச், தக்கியா உள்ளிட்ட மாவட்டங்கள் கூறப்படுகின்றன. எனவே, இந்தப் பகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
பலத்த பாதுகாப்பு
பதற்றம் நிறைந்த இந்தப்பகுதிகளில் மட்டும், மாலை 4 மணிக்கே வாக்குப்பதிவு நிறைவுபெறும் என்று தேர்தல் அதிகாரிகள் ஏற்கனவே அறிவித்துள்ளனர். பிற இடங்களில் 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு வழக்கம் போல் மாலை 5 மணிக்கு முடிவடையும்.
வாக்கு எண்ணிக்கை?
இதனைத் தொடர்ந்து பஞ்சாப், மணிப்பூர், உத்தரபிரதேசம், உத்தரகண்ட் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களிலும் வருகிற 11ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதன் எந்தக் கட்சி எந்த மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என்பது தெரிய வரும்.