நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராவதை தடுக்க வழக்கு தொடருவோம்.. லாலு மகன் தேஜஸ்வி யாதவ்
பீகார் முதல்வராக நிதிஷ்குமாரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததை தடுக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன் என்று துணை முதல்வராக இருந்த தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.
பாட்னா: பாஜக ஆதரவுடன் பீகார் முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்பதை தடுக்க நீதிமன்றத்தை நாடுவேன் என லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் எச்சரித்துள்ளார்.
கடந்த 2015-ஆம் ஆண்டில் நடைபெற்ற பீகார் சட்டசபை தேர்தலில் மகா கூட்டணி அமைத்து ஐக்கிய ஜனதா தளமும், ராஷ்ட்ரீய ஜனதா தளமும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து முதல்வராக நிதிஷ்குமாரும், துணை முதல்வராக லாலுவின் மகன் தேஜஸ்வியும் பதவியேற்றுக் கொண்டனர்.

இரு ஆண்டுகள் கடந்த நிலையில் மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் தேஜஸ்வியின் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனால் அவரை பதவி விலகுமாறு நிதிஷ்குமார் கோரினார். ஆனால் லாலுவும், தேஜஸ்வியும் பதவி விலக மறுத்துவிட்டனர். இதனால் ஏற்பட்ட மோதலை அடுத்து நிதிஷ்குமார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
தற்போது நிதிஷ்குமாருக்கு பாஜக ஆதரவு அளித்துள்ளது. பீகார் மாநில பாஜக தலைவர் சுஷில்குமார் மோடி நேற்று மாலை ஆளுநர் கேசரிநாத் திரிபாதியை சந்தித்து, நிதிஷ்குமார் புதிய அரசு அமைக்க பாஜக ஆதரவு அளிப்பதாக கூறி கடிதம் கொடுத்தார்.
பீகார் முதல் அமைச்சராக இன்று நிதிஷ் குமார் பதவியேற்க உள்ள நிலையில், துணை முதல்வராக பாஜகவின் சுஷில் குமார் மோடி பதவியேற்கிறார். இந்த நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க தங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தேஜஸ்வி யாதவ் நேற்று நள்ளிரவு ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலம் சென்றார். ஆனால் நிதிஷ்குமாரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இதுகுறித்து தேஜஸ்வி கூறுகையில், சட்ட ஆலோசனைகளை நாங்கள் பெற்று வருகிறோம். ஆளுநரின் இந்த முடிவுக்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிடுவோம் என்றும் தெரிவித்தார். மேலும் ட்விட்டரில், ஆளுநரை சந்திப்பதற்கு நேரம் கேட்டுள்ளோம். பெரிய கட்சியான நாங்கள் ஆட்சி அமைக்க உரிமை கோருவோம். ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏக்களின் ஆதரவையும் நாங்கள் பெறுவோம் என்றும் தேஜஸ்வி குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications