ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்களுக்கு சம்மன்: மார்ச் 2ம் தேதி ஆஜராக உத்தரவு
டெல்லி: ஏர்செல் நிறுவன பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்துக்கு கட்டாயப்படுத்தி விற்க வைத்து, அதற்கு பிரதி உபகாரமாக, மேக்சிஸ் நிறுவனம் சன் டிவியின் சன் டைரக்ட் டிடிஎச் நிறுவனத்தில் ரூ. 600 கோடி அளவுக்கு முதலீடு செய்த வழக்கில் கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன்ஆகியோருக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
அடுத்த ஆண்டு மார்ச் 2ம் தேதி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வருகிறது. சிபிஐ குற்றப்பத்திரிகையில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், மலேசியவைச் சேர்ந்த மேக்சிஸ் மற்றும் ஆஸ்ட்ரோ ஆல் ஏசியா நெட்வொர்க் ஆகிய நிறுவனங்களின் அதிபரான ஆனந்த கிருஷ்ணன், அந்த நிறுவன அதிகாரி ரால்ப் மார்ஷல், சன் டைரக்ட் டிவி பிரைவேட் லிமிடெட் மற்றும் சவுத் ஏசியா என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

குற்றசாட்டுக்கு உள்ளானவர்கள் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சிபிஐ கோரி வருகிறது. இம்மாதம் 13ம்தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 29ம் தேதிக்கு (இன்று) வழக்கை ஒத்தி வைத்த நீதிபதி அன்றைய தினமே நேரில் ஆஜராவது குறித்த கோரிக்கை மீது உத்தரவிடப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதன்படி வழக்கு இன்று வந்தபோது, குற்றச்சாட்டுக்கு ஆளான அனைவரும் அடுத்த ஆண்டு மார்ச் 2ம்தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதற்காக மாறன் சகோதரர்கள், ஆனந்தகிருஷ்ணன் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கு ஆளான அனைவருக்கும் சம்மன் அனுப்பி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பின்னணி:
2004-2007 ஆண்டு காலத்தில் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தார். அப்போது வெளிநாட்டு வாழ் இந்தியத் தொழிலதிபரான சிவசங்கரன், சென்னையில் நடத்தி வந்த ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு கேட்டு 2006ம் ஆண்டில் விண்ணப்பித்திருந்தார். ஆனால் அதற்கு தயாநிதி மாறன் உடனடியாக ஒப்புதல் அளிக்கவில்லை.
இந்நிலையில் ஏர்செல் நிறுவனப் பங்குகள் திடீரென மலேசியாவைச் சேர்ந்த தொழிலதிபர் அனந்த கிருஷ்ணனுக்கு சொந்தமான மேக்சிஸ் நிறுவனத்துக்கு கைமாறின. பங்குகள் கைமாறியவுடன் ஏர்செல் நிறுவனத்துக்கு 14 ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமங்களை தயாநிதி மாறன் வழங்கினார்.
இதற்குப் பிரதிபலனாக மேக்சிஸ் நிறுவனம் தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறன் நடத்தும் சன் டிவி குழுமத்தின் "சன் டைரக்ட்' நிறுவனத்தில் ரூ.650 கோடி முதலீடு செய்தது, இந்த பணம் மொரீசியஸ் உள்ளிட்ட வெளிநாடுகள் வழியே சன் டைரக்ட் நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வந்தன. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
சிபிஐயிடம் சிவசங்கரன் கொடுத்த வாக்குமூலத்தில், என்னை மிரட்டி ஏர்செல் பங்குகளை அனந்த கிருஷ்ணனுக்கு விற்க வைத்தார் தயாநிதி மாறன் என்று குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு தொடர்பாக 72 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை, 151 சாட்சியங்கள், 655 ஆதார கோப்புகள் ஆகியவை சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications