சர்ச்சையில் சிக்கிய 251 ரூபாய் ஸ்மார்ட் போன்...டெலிவரி தேதி அறிவிப்பு !
டெல்லி: உலகின் மிகக்குறைந்த விலையிலான ஸ்மார்ட் போன் என்ற அறிமுகத்தோடு வெளியான ரிங்கிங் பெல் நிறுவன செல்போன்கள் ஜூன் 28ம் தேதி முதல் டெலிவரி செய்யப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
ப்ரீடம் 251 என்ற பில்டப்போடு ரிங்கிங் பெல் என்ற நொய்டாவை சேர்ந்த நிறுவனம், ரூ.251க்கு ஸ்மார்ட் போன் தருவதாக அறிவித்தது. இந்த போனிற்கான முன்பதிவு, கடந்த பிப்ரவரி 17ம் தேதி துவங்கி 22ம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த குறைந்தவிலை ஸ்மார்ட்போனுக்கு மக்களிடம் அதிக வரவேற்பு இருந்தது.
ஆன்ட்ராய்டு 5.1 இயங்குதளம் கொண்ட ப்ரீடம் 251 செல்போன் 4 இன்ச் க்யூஎச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே இருக்கும். 3.2 மெகா பிக்ஸல் ஆட்டோ போகஸ் கேமரா, 0.3 மெகாபிக்ஸல் முன்பக்க கேமரா, 1.3 ஜிஎச்இச் குவாட் கோர் பிராசர், 1ஜிபி ராம், 8ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் (எஸ்டி கார்ட் சப்போர்ட்டுடன்), 1450 எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப் ஓஎஸ் என கலக்கலான அம்சங்களுடன் விற்பனை செய்யப்பட உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்தது.
ப்ரீடம் 251 செல்போனின் விளம்பரங்கள் நாடு முழுவதும் பெரிதும் கவனம் பெற்றதுடன் ஒரேநாளில் 30,000 பேர் செல்போனுக்கு பணம் செலுத்தி பதிவு செய்தனர். மொத்தம் 7 கோடி பேர் ப்ரீடம் 251 செல்போன்களுக்கு பதிவு செய்துள்ளதாக ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது. மொத்தமாக புக் செய்ய வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டியதால், முன்பதிவு நடைபெற்ற நாட்களில் அந்த நிறுவனத்தின் வெப்சைட்டே ஜாம் ஆனது.
இதனிடையே, பல்வேறு பிரச்சினைகளால் பணம் செலுத்தியோருக்கு பணத்தை ப்ரீடம் 251 திரும்ப அளித்தது. ரூ.2,400 மதிப்பிலான ஆன்ட்ராய்டு செல்போனை ரூ.251-க்கு வழங்குவதாகக் கூறி முறைகேட்டில் ஈடுபடுவதாக கூறி அந்த நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான, வழக்கு நடைபெற்று வரும் நிலையில், திட்டமிட்டபடி, ஜூன் மாதம் முதல்கட்ட விற்பனை தொடங்கும் என ரிங்கிங் பெல்ஸ் நிறுவன இயக்குநர் மொயித் கோயல் தெரிவித்துள்ளார்.
வரும் 28ம் தேதி முதல் கேஷ் ஆன் டெலிவரி முறையில் பதிவு செய்தவர்களுக்கு செல்போன்களை வினியோகம் செய்ய உள்ளதாக ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. பதிவு செய்துள்ள 7 கோடி பேரில் பதிவு அடிப்படையில் 25 லட்சம் பேர்களுக்கு முதல்கட்டமாக செல்போன்கள் ஷிப்பிங் செய்யப்பட்டு டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.