பெண் குழந்தைக்கு 'தேவையற்றவள்' என பெயர் சூட்டிய பெற்றோர்... இது ம.பி. அவலம்
மத்திய பிரதேசத்தில் பெண் குழந்தைகளுக்கு ‘தேவையற்றவள்’ எனப் பெற்றோர் பேர் வைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போபால்: மத்திய பிரதேசத்தில் விருப்பத்துக்கு மாறாக பிறந்த பெண் குழந்தைக்கு தேவையற்றவள் என அக்குழுந்தையின் பெற்றோர் பெயர் சூட்டிய அவல சம்பவம் பல ஆண்டுகள் கழித்து வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மாண்ட்சார் மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் ஆண் குழந்தை வேண்டும் என எதிர்பார்க்கும் பெற்றோருக்கு பெண் குழந்தை பிறந்தவிட்டால் அந்தக் குழந்தைக்கு 'ஆன்சாஹீ', அதாவது தேவையற்றவள் என பொருள்படும் பெயர் சூட்டுவது வழக்கமாக உள்ளது.
இவ்வாறு பெயர் சூட்டப்படும் அக்குழந்தை, விபரம் தெரியாமல் அந்த பெயரை தாங்கி வளர்கிறது. ஆனால் பெரியவள் ஆனதும் அந்த பெண் சந்திக்கும் அவமானங்கள் கொஞ்சநஞ்சம் அல்ல. பள்ளி, கல்லூரி என அந்த பெண் பிள்ளைகள் செல்லும் இடங்களில் எல்லாம் அவமானப்பட நேரிடுகிறது. இந்த பெயரால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் அப்பெண்கள்.
ஆன்சாஹீ என பெயர் சூட்டப்பட்ட இரு பெண் குழந்தைகள் பற்றிய தகவல்கள் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மாண்ட்சார் மாவட்டத்தை சேர்ந்த அவர்களில் ஒருவர், கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து வருகிறார். மற்றொருவர் பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கிறார்.
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கல்லூரி மாணவி ஆன்சாஹீயின் தாய் காந்தி பாய்," எனது கணவர் வாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஒரு மகன் பிறந்தால் நன்றாக இருக்கம் என நினைத்தோம். ஆனால் ஐந்தாவதாக பிறந்ததும் பெண் குழந்தையாகிவிட்டது. அதனால் தான் ஆன்சாஹீ என பெயர் வைத்தோம். பின் ஆறாவது குழந்தையும் பெண்ணாக பிறந்துவிட்டது. இதையடுத்து குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்டோம்", எனக் கூறினார்.
ஆன்சாஹீ என்ற பெயருடன் பல அவமானங்களை தாங்கிக்கொண்டு கல்லூரியில் படிக்கு அந்த பெண், " குழந்தையாக இருக்கும் போது எனது பெயருக்கான அர்த்தம் புரியவில்லை. ஆனால் இபோது அவமானமாக இருக்கிறது. எனவே எனது பெயரை மாற்றிக்கொள்ள போகிறேன்", என திடமானக் குரலில் கூறுகிறார்.
தேவையற்றவள் என பெயர் சூட்டப்பட்ட அந்த பெண் குழந்தைகள், எதிர்காலத்தில் இன்றியமையா சக்தியாக மாற வேண்டும் என பெண்ணிய ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.