முன்னாள் எம்.எல்.ஏவின் மகள் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு... மோசடி செய்த சென்னைப் பெண் கைது
பெங்களூர்: கர்நாடகத்தை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகள் பெயரில் போலி ‘பேஸ்புக்' கணக்கு தொடங்கி மோசடி செய்ததாக சென்னை இளம்பெண்ணை பெங்களூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த பாஜக ஆட்சியின் போது கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டம் சாகர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாகவும் பேளூர் கோபால கிருஷ்ணா. கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், அதே தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் கோபாலகிருஷ்ணா.
பேளூர் கோபால கிருஷ்ணாவுக்கு, மேகா என்ற மகள் உள்ளார். நேற்று பெங்களூர் ஆர்.டி.நகர் போலீஸ் நிலையத்திற்கு வந்த மேகா, தனது பெயரில் போலி ‘பேஸ்புக்' கணக்கு தொடங்கி மோசடி நடந்து வருவதாக புகார் அளித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் மேகா கூறுகையில், ‘என்னுடைய பெயர், புகைப்படத்துடன் போலியான முறையில் ‘பேஸ்புக்' கணக்கு தொடங்கப்பட்டு உள்ளது. இதனை சென்னையை சேர்ந்த பிரதீமா என்ற பெண் தொடங்கி உள்ளார். அவர் என்னுடன் 10-ம் வகுப்பு வரை படித்தவர். அதன்பிறகு, எனக்கு அந்த பெண்ணுக்கும் எந்த தொடர்பும் இல்லாமல் போய் விட்டது. ஆனால் தற்போது எனது பெயரில் போலி ‘பேஸ்புக்' கணக்கு தொடங்கி, ஏராளமான ஆண் நண்பர்களுடன் பழகுகிறார். அவர்களுடன் கருத்துகளை பரிமாறி வருகிறார்.
அதுமட்டும் இல்லாமல் அந்த பெண், முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகள் (எனது தந்தை பெயரை) என்று கூறிக் கொண்டு ‘வாட்ஸ்-அப்‘ மூலம் வாலிபர்களுக்கு குறுந்தகவல்களை அனுப்புகிறார். என்னுடைய பள்ளி பருவ புகைப்படம் மற்றும் எனது பெயரை பயன்படுத்தி, இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டு வருகிறார். இதுபற்றி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் எனக்கு தெரியவந்தது. அதுபற்றி முழுவிவரத்தை திரட்டி வந்து தற்போது போலீசில் புகார் கொடுத்துள்ளேன்' எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, மேகா கொடுத்த புகாரின் பேரில் சென்னையைச் சேர்ந்த இளம்பெண் பிரதீபா பேரில் வழக்குப் பதிவு செய்த ஆர்.டி.நகர் போலீசார், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, பிரதீமா பெங்களூரில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து நேற்று இரவு அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications