4ம் வகுப்பு மாணவி உரையை கேட்டு குமுறி அழுத குஜராத் முதல்வர்!
காந்திநகர்: பெண் சிசுக்கொலை பற்றி நான்காம் வகுப்பு மாணவி பேசிய பேச்சை கேட்டு கூடியிருந்த பொதுமக்கள் மட்டுமின்றி, விழாவுக்கு தலைமையேற்ற குஜராத் முதலவர் ஆனந்தி பென்னும் கண்ணீர் சிந்தியுள்ளார்.
குஜராத் மாநிலம் கேதா மாவட்டம், மகுதா தாலுகாவிலுள்ள ஹீரஞ்ச் என்ற கிராமத்தில் பள்ளி குழந்தைகளுக்கான நலத்திட்ட உதவி விழா நடைபெற்றது. முதல்வர் ஆனந்தி பென் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் நான்காம் வகுப்பு மாணவி அம்பிகா கோயல், பெண் சிசுக்கொலை குறித்து உரையாற்றினார். கருக் கலைப்புக்கு உள்ளான ஒரு பெண் குழந்தை, தனது தாய்க்கு எழுதிய கடிதம் என்பதாக கூறி கற்பனையின் மூலம் வடித்த ஒரு கடிதத்தை அந்த சிறுமி வாசித்தாள்.
குழந்தையின் ஆசை
தனது தாயை பார்த்து அந்த குழந்தை பல கேள்விகளை கேட்பதை போல கடிதம் இருந்தது. இந்த உலகத்தை பார்க்க தான் எப்படியெல்லாம் ஆசைப்பட்டேன் என்றும், உலக காற்றை சுவாசிக்க நான் ஏங்கினேன் என்றும் ஏக்கமாக குழந்தை கூறுவது போல அந்த கடிதம் அமைந்திருந்தது.
பெண் சிசு கொலை
இப்படியெல்லாம் ஆசைப்பட்டு ஏங்கிய என்னை, பெண் குழந்தை என்று தெரிந்து கொண்டதால் கொன்றுவிட்டீர்களே என்று அந்த கடிதம் மேலும் நீண்டபோது, கூட்டத்தில் இருந்த பலரும், உணர்ச்சி மிகுதியால் கண்ணீர் வடித்தனர்.
கண்ணீர் சிந்திய முதல்வர்
முதல்வர் ஆனந்தி பென்னும் இதைக்கேட்டு கண்ணீர் மல்கினார். பேசி முடித்ததும், அம்பிகாவை தனது அருகே கூப்பிட்டு அணைத்துக் கொண்டு முத்தமிட்டார் ஆனந்தி பென். சிறுமியிடம் உனக்கு என்னவாக ஆசை என முதல்வர் கேட்டார். அச்சிறுமி தனக்கு டாக்டராக வேண்டும் என்று ஆசையுள்ளதாக தெரிவித்தார். சிறுமியிடம் ஆப்பிளை கொடுத்து அனுப்பிய முதல்வர், கர்சீப்பை எடுத்து கண்களை துடைத்துக்கொண்டார்.
உதவ உறுதி
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆனந்தி பென், பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சமூகத்தில் இப்போதுள்ள பிரச்சினைகள் குறித்த தெளிவை ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும் என்றும், பள்ளிகள் மேம்பாட்டுக்கு அரசு அனைத்து உதவியையும் செய்யும் என்றும் தெரிவித்தார்.