கோவா தேர்தல்: "எதோ சரியில்லை.. இது ரொம்ப தப்புங்க" பாரிக்கர் மகனை தோற்கடித்த பாஜக வேட்பாளர் புலம்பல்
கோவா: கோவாவில் உத்பால் பாரிக்கர் எதிராக வென்ற போதிலும் பாஜக வேட்பாளர் அதனாசியோ மான்செரேட் தான் மகிழ்ச்சியாக இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் ஆட்சியில் இருந்த 4 மாநிலங்களிலும் பாஜக தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இந்த வெற்றி பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. இதை நாடு முழுவதும் உள்ள பாஜக தொண்டர்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.

கோவா தேர்தல்
நாட்டிலேயே மிகச் சிறிய மாநிலமான கோவாவில் மொத்தம் 40 தொகுதிகள் உள்ள நிலையில், அங்கு ஒரு கட்சி ஆட்சி அமைக்கக் குறைந்தது 21 தொகுதிகளில் வெல்ல வேண்டும். கோவா மாநிலத்தில் காங், தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதை பொய்யாக்கும் வகையில் பாஜக 20 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 12 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. 2 சுயேச்சைகள் பாஜகவுக்கு ஆதரவு கொடுத்துள்ளதாகவும் விரைவில் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாகவும் பாஜக தெரிவித்துள்ளது.

மனோகர் பாரிக்கர் மகன்
கோவா மாநிலத்தில் கட்சி வேற்றுமைகளைத் தாண்டியும் மிகவும் மதிக்கப்படும் தலைவராக மனோகர் பாரிக்கர் இருந்தார். கடந்த 2019ஆம் ஆண்டு மனோகர் பாரிக்கர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்த சட்டசபைத் தேர்தலில் மனோகர் பாரிக்கரின் பனாஜி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட விரும்பிய உத்பால், இதற்காக வேட்பு மனுவும் தாக்கல் செய்தார். இருப்பினும், ஆனால் அவருக்கு அந்த தொகுதி மனோகர் பாரிக்குக்கு ஒதுக்கப்படவில்லை. இதனால் உத்பால் பாரிக்கர் பாஜகவில் இருந்து விலகித் தனித்துப் போட்டியிட்டார்.

சுயேச்சை
அவருக்கு ஆதரவு தருவதாக ஆம் ஆத்மி, சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் அறிவித்தன. ஆனால் அவர் எந்த கட்சியிலும் சேரவில்லை. இந்நிலையில், பனாஜி தொகுதியில் உத்பால் பாரிக்கரால் வெல்ல முடியவில்லை. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதனாசியோ மான்செரேட் பெரியளவில் வெற்றி பெற்றுள்ளார். இருப்பினும், இந்த வெற்றி தனக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதாக இல்லை என்று அதனாசியோ மான்செரேட் தெரிவித்துள்ளார். பாஜக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் மக்கள் அதையே விரும்புவதாகவும் அதனாசியோ மான்செரேட் தெரிவித்துள்ளார்.

புலம்பும் பாஜக வேட்பாளர்
இது குறித்து அதனாசியோ மான்செரேட் கூறுகையில், "மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வென்றுள்ளேன். இது மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. பாஜக ஆதரவாளர்களே பலரும் எனக்கு வாக்களிக்கவில்லை. இது சரியான அணுகுமுறை இல்லை. இது தொடர்பாக பாஜக தலைவர்களிடம் பேச உள்ளேன். எதிர்காலத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும். பாஜக பிரிந்து கிடப்பது மக்களிடையே எதிர்மறையான எண்ணத்தை உருவாக்கும். பாஜகவிலேயே நான் தொடர்ந்து பயணிப்பேன். இந்த விவகாரத்தில் கட்சி நல்ல முடிவு எடுக்கும் என நம்புகிறேன்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications