அதிகாலை 4 மணிக்கு குடியரசு தலைவரை எழுப்புவதா.. நீதிமன்ற வளாகத்தில் ஆவேசமான ப.சிதம்பரம்
டெல்லி: அதிகாலை 4 மணிக்கு குடியரசு தலைவரை எழுப்பி மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சியை வாபஸ் பெறச் செய்தது கவலையளிக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
ஐஎன்எக்ஸ் வழக்கு தொடர்பாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ப.சிதம்பரம். அவர் சிறைவாசம் 100வது நாளை நெருங்கிவிட்டது. டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை டிச.11 வரை நீட்டித்தது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.
இதையடுத்து நீதிமன்றத்திலிருந்து, சிறைச்சாலை அழைத்துச் செல்லப்பட்டார் சிதம்பரம். அப்போது நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த நிருபர்களிடம் அவர் சில வார்த்தைகள் பேசினார். அவர் கூறுகையில், மகாராஷ்டிராவில் நடைபெற்ற நள்ளிரவு விவகாரங்களுக்கு, குடியரசு தலைவர், பிரதமர் மற்றும் ஆளுநர் என அனைவருமே பொறுப்பாளிகள். இதில் குடியரசு தலைவரும் பங்கெடுத்திருப்பது கவலையளிக்கிறது. அதிகாலை 4 மணிக்கே அவரை எழுப்பியுள்ளது வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு சிதம்பரம் தெரிவித்தார்.
P Chidambaram while being taken to jail after hearing: Governor, Prime Minister & President were all responsible for that midnight affair (Fadnavis & Ajit Pawar oath). It is sad that the President is involved, deeply sad that he is woken up at 4 am in the morning. #Maharashtra pic.twitter.com/2THOdgMZ3C
— ANI (@ANI) November 27, 2019
பட்னாவிஸ் அரசு அதிகாலையிலேயே பதவியேற்க வசதியாக, குடியரசு தலைவர் ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டதை சிதம்பரம் இவ்வாறு குறிப்பிட்டார்.
முன்னதாக, இன்று காலை, தனது குடும்பத்தார் மூலம், டுவிட்டரில் வெளியிட்ட தகவலில்,
It was an assault on the office of Rasthrapathi to wake him up at 4.00 am to sign an order revoking President's Rule.
— P. Chidambaram (@PChidambaram_IN) November 27, 2019
Why could it not have waited until 9.00 am in the morning?
குடியரசு தலைவர் ஆட்சியை விலக்கிக் கொள்ள, அதிகாலை 4 மணிக்கு, குடியரசு தலைவர் எழுப்பப்பட்டுள்ளார். இது ஜனாதிபதி மாளிகை மீதான தாக்குதல். காலை 9 மணி வரை ஏன் இவர்கள் காத்திருக்கவில்லை? என்று கூறியிருந்தார்.
மற்றொரு ட்வீட்டில், சிவசேனா-என்.சி.பி-காங்கிரஸ் கூட்டணி அரசிற்கு, அன்பான வாழ்த்துக்கள். உங்களது தனிப்பட்ட கட்சி நலன்கள் ஒருபக்கம் இருந்தாலும், விவசாயிகளின் நலன், முதலீடு, வேலைவாய்ப்பு, சமூக நீதி மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் ஆகியவற்றை மூன்று கட்சிகளின் பொதுவான நலன்களாக கொண்டு ஒன்றிணைந்து செயல்படுங்கள் என்று கூறியிருந்தார் சிதம்பரம்.