சிறை தண்டனையை ரத்து செய்ய கோரிய சஞ்சய்தத் மனுவை நிராகரித்தார் மகா. ஆளுநர்!
மும்பை: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை ரத்து செய்யக் கோரி நடிகர் சஞ்சய் தத் அனுப்பிய மனுவை மகாராஷ்டிரா மாநில ஆளுநர் வித்யாசகர் ராவ் நிராகரித்தார்.
1993ஆம் ஆண்டு மும்பையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் கொல்லப்பட்டனர். 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட முதலாவது பயங்கரவாத தாக்குதல் இது. இந்த வழக்கில் நடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டு காலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் ஏற்கெனவே ஒன்றரை ஆண்டுகாலம் சிறையில் இருந்ததால் மூன்றரை ஆண்டுகாலம் சிறைவாசம் அனுப்பவிக்க வேண்டும்.
தற்போது சிறையில் சஞ்சய் தத் இருந்தாலும் பரோலில் பல முறை வெளியேவந்து சென்றிருக்கிறார். இந்நிலையில் தாம் செய்த குற்றத்துக்கு மன்னிப்பு கோரி தமது சிறைத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று மகாராஷ்டிரா ஆளுநர் வித்யாசகர் ராவுக்கு சஞ்சய் தத் மனு ஒன்றை அனுப்பியிருந்தார்.
இம்மனுவை ஆளுநர் வித்யாசகர் ராவ் நிராகரித்து தள்ளுபடி செய்துள்ளார்.