ஆதார் அட்டை வழங்கும் பணிகளை மார்ச்சுக்குள் முடிக்க வேண்டும்: பிரதமர் அலுவலகம் உத்தரவு
டெல்லி: ஆதார் அட்டை வழங்கும் திட்டப் பணியை வரும் மார்ச் மாதம் இறுதிக்குள் முடிக்குமாறு பிரதமர் அலுவலகம் பொது அடையாள எண் ஆணையத்துக்கு (UIDAI ) உத்தரவிட்டுள்ளது.
ஆதார் அடையாள அட்டை வழங்கும் பணி வட மாநிலங்களில் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 70 கோடி மக்களுக்கு ஆதார் அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது.
இனி வரும் காலத்தில் அனைத்து விதமான சேவைகளுக்கான அடையாள ஆவணமாக ஆதார் அட்டையை பயன்படுத்தலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எனவே ஆதார் அட்டை வழங்கும் திட்டப் பணியை வரும் மார்ச் மாதம் இறுதிக்குள் முடிக்குமாறு என்.பி.ஆர் எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவகத்துக்கும், ஆதார் அடையாள எண் வாரியத்துக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்த திட்டம், புதிய அரசு பதவியேற்ற பிறகு கிடப்பில் போடப்பட்டது. இப்போது மீண்டும் அதை துரிதப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.