பஞ்சாப்பில் பெரும் பதற்றம்.. போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிவசேனா தலைவர் சுட்டுக்கொலை.. போலீஸ் விசாரணை
அமிர்தசரஸ்: பஞ்சாப்பில் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த அம்மாநில சிவசேனா கட்சி தலைவர் சுதிர் சூரியை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் கோபால் மந்திர் என்ற பிரபலமான கோவில் உள்ளது.
இந்த கோவில் அருகே துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும், அந்த கோவிலுக்கு வெளியே சில துப்பாக்கி குண்டுகள் கிடந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆளுநருக்கு ஆதரவாக ஓபிஎஸ் 'வாய்ஸ்’.. திமுகவுக்கு ஆப்போசிட்டா? “சொன்னதெல்லாம் பொய்யா?” என்னாச்சு?
துப்பாக்கியால் சுடப்பட்டார்
இந்த நிலையில், கோவில் வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவத்தை கண்டித்து பஞ்சாப் மாநில சிவசேனா தலைவர் சுதிர் சூரி போராட்டம் நடத்தினார். அவருடன் கட்சி நிர்வாகிகள் பலரும் சேர்ந்து கோவிலுக்கு வெளியே சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். போலீசாரும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதியில் இருந்தனர். இந்த நிலையில், திடீரென மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் தட தடவென சுடும் சத்தம் கேட்டது. இதில் சுதிர் சூரி வலது கையில் குண்டு பாய்ந்தது.
ரத்தம் பீறிட்டு
இதனால் அந்த இடத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. போலீசாருடன் பேசிக்கொண்டு இருந்த நேரத்தில் சுடப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. கையில் ரத்தம் பீறிட்டு வெளியேற உடனடியாக அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பஞ்சாப் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
12 போலீசார் பாதுகாப்பு
உடனடியாக துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தீப் சிங் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து துப்பாக்கியையும் பறிமுதல் செய்துள்ளது. கைது செய்யப்பட்ட நபரிடம் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான நோக்கம் குறித்து தீவிர விசாரணையை நடத்தி வருகிறது. சிவசேனா கட்சியின் பஞ்சாப் தலைவர் சுரிக்கு 12 போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
பதை பதைக்க வைக்கும் வீடியோ
இந்த போராட்டத்தின் போது கூடுதல் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்து இருக்கின்றனர். இதையும் மீறி தாக்குதல் நடத்தபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் மேலும் மூன்று பேருடன் ஒரு எஸ்.யூவி ரக காரில் வருகை தந்தாகவும் அந்த மூன்று பேரும் காரில் தப்பி விட்டதாகவும் முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. இதற்கிடையே இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பார்ப்பவர்களை பதை பதைக்க வைத்துள்ளது.
யார் இந்த சுதிர் சூரி
துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சுதிர் சூரி தேர்தலில் அதிகம் பங்கேற்றது கிடையாது. ஆனாலும் மத ரீதியாகவும் சர்ச்சைக்குரிய வகையிலும் கருத்துக்களை பேசுவதை வாடிக்கையாக கொண்டவர். குறிப்பாக சீக்கிய இயக்கங்கள் குறித்தும் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராகவும் சுதிர் சூரி பேசிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கின்றன. எனினும், இத்தகைய பேச்சுக்கும் தாக்குதலுக்கும் தொடர்பு உள்ளதா? என்று போலீஸ் தரப்பில் உறுதிபடுத்தப்படவில்லை.
ஆம் ஆத்மிக்கு நெருக்கடி
மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று மதவாத பதற்றைத்தை ஏற்படுத்தும் வகையில் எந்த செயல்பாட்டிலும் ஈடுபடக்கூடாது என்று போலீஸ் ஆணையர் தெரிவித்துள்ளனர். பஞ்சாப்பில் கடந்த மே மாதம் பிரபல பாடகர் சித்து மூஸ்வாலா காரில் சென்று கொண்டிருந்த போது துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் நடைபெற்று அடுத்த சில மாதங்களில் மீண்டும் பிரபலமான ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டு இருப்பது ஆம் ஆத்மி கட்சிக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது.