கதையில் ட்விஸ்ட்.. ஜி.எஸ்.டி வாக்கெடுப்பை அதிமுக புறக்கணித்ததே மத்திய அரசுக்கு உதவத்தானா?
டெல்லி: சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை எதிர்த்தாலும், அதன் மீது வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்ததன் மூலம், மத்திய அரசுக்கு, அதிமுக மறைமுகமாக உதவி செய்துள்ளதாகவே கருதுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
ஜி.எஸ்.டி எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி மசோதா, லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட நிலையில், அந்த மசோதாவை, நேற்று முன்தினம், ராஜ்யசபாவில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிமுகம் செய்தார்.
உறுப்பினர்களின் 7 மணி நேர விவாதத்திற்கு பிறகு வாக்கெடுப்பு நடந்தது. இதில் ஆதரவாக 203 வாக்குகள் கிடைத்தன. எதிர்த்து ஒரு வாக்கும் கிடைக்கவில்லை. ஏனெனில் மசோதாவை எதிர்த்த ஒரே கட்சியான அதிமுக வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்திருந்தது.
எதிர்த்த அதிமுக
முன்னதாக விவாதத்தில் பேசிய அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன், மாநில வரி விதிப்பு சுதந்திரத்தை இந்த மசோதா நசுக்குவதாகவும், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான மசோதா என்றும், கடும் கண்டனங்களை பதிவு செய்தார்.
எதிர்த்து வாக்கு
மேலும், சில திருத்தங்களை முன் வைத்து அதை மசோதாவில் சேர்க்க கோரினார். ஆனால் இதை மத்திய அரசு ஏற்கவில்லை. நவநீதகிருஷ்ணன் பேசியதை பார்த்தால், வாக்கெடுப்பில் அதிமுக எதிர்த்து வாக்களிக்கும் என்றுதான் நினைக்க தோன்றியது.
வெளிநடப்பு
ஆனால், விவாதத்திற்கு பிறகு நடைபெற்ற வாக்கெடுப்பில், பங்கேற்காமல் நவநீதகிருஷ்ணனும் பிற உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
12 எம்.பிக்கள்
நாடாளுமன்றத்தில் மொத்தம் 50 எம்.பி.க்களை கொண்டிருந்தது அதிமுக. லோக்சபாவில் 37; ராஜ்யசபாவில் 13 எம்.பிக்கள் இருந்தனர். சசிகலா புஷ்பா சமீபத்தில்தான் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் என்பதால் தற்போது ராஜ்யசபாவில் அக்கட்சி பலம் 12 எம்.பிக்களாக உள்ளது.
ஏக மனது
அதிமுகவின் 12 எம்.பிக்களும் எதிர்த்து வாக்களித்திருந்தால், 191 வாக்குகள் மசோதாவுக்கு ஆதரவாகவும், 12 வாக்குகள் எதிராகவும் கிடைத்திருக்கும். ஆனால், இப்போதோ, ஏக மனதாக மசோதா நிறைவேறியதாக கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது.
மாற்ற முடியாதுல்ல
"கடந்த 2 வருடங்களாகவே, ஜி.எஸ்.டி மசோதாவை அதிமுக எதிர்த்து வருகிறது. எனவே திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றி ஆதரவு தெரிவிக்க முடியாது என்பதால்தான், 'மறைமுக ஆதரவாக' அக்கட்சி வெளிநடப்பு செய்துவிட்டது" என்கிறார் பெயர் தெரிவிக்க விரும்பாத அரசியல் விமர்சகர் ஒருவர்.
தமிழகத்திற்கு சில நன்மை
பொருளாதார நிபுணர் வெங்கடேஷ் கூறுகையில், அரசியல் வகையிலான ஆதரவு என்பதைவிட, பொருளாதார ரீதியில் தமிழகத்திற்கு சேவை வரி வருவாய் அதிகம் கிடைக்கும் என்பதே அதிமுகவின் வெளிநடப்புக்கு காரணமாக இருந்திருக்கும். எதிர்த்து வாக்களித்தாலும் மசோதாவை நிறைவேறாமல் தடுத்திருக்க முடியாது என்கிறார்.
தேவையில்லங்க
அதிமுக எம்.எல்.ஏ, மாஃபா பாண்டியராஜன் கூறுகையில், தனது முடிவை மாற்றிக்கொண்டு, ஜி.எஸ்.டி மசோதாவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்க காரணம் கார்பொரேட்டுகளின் நலன். ஆனால், அதிமுகவுக்கு அப்படி எந்த அவசியமும் இல்லை என்பதால் மாநில நலனுக்காக எதிர்த்தோம். வெளிநடப்பு செய்தோம் என்றார்.
நடுநிலை
பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறுகையில், அதிமுக ஆதரவு மற்றும் எதிர்ப்பற்ற நடுநிலையை எடுத்துள்ளதாக நினைக்கிறேன். பாஜக அரசுக்கு அவர்கள் உதவியதாக கருதவில்லை என்றார்.