5,874 விவசாயிகள் தற்கொலை செய்யவில்லை ஒருவர்தான் மரணம்: கேஜ்ரிவாலுக்கு குஜராத் அரசு பதில்!!
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் 10 ஆண்டுகளில் 5,874 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியிருப்பது மிகப் பெரிய பொய் என்றும் கடந்த 10 ஆண்டுகளில் ஒரே ஒரு விவசாயி மட்டுமே தற்கொலை செய்து கொண்டதாகவும் குஜராத் அரசு கூறியுள்ளது.
வாரணாசியில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிட தயார் என்று அறிவித்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர் குஜராத் அரசு மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். கேஜ்ரிவால் பொதுக்கூட்டம் முடிவடைந்த சிறிது நேரத்திலேயே அவரது குற்றச்சாட்டுகளுக்கு குஜராத் அரசு பதிலளித்து நீண்ட அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
அதில் கேஜ்ரிவால் தெரிவித்த புகார் என்ன? அதற்கான குஜராத் அரசின் விளக்கம் என்று விவரிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்:
மூடப்பட்ட தொழிற்சாலைகள்
கேஜ்ரிவால் பேசியது: குஜராத்தில் 60 ஆயிரம் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் மூட்பட்டுவிட்டன.
குஜராத் அரசு: குஜராத்தில் மொத்தம் 5.19 லட்சம் பதிவு செய்யப்பட்ட சிறுகுறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. 2001-02ஆம் ஆண்டு கணக்கின்படி படி 22% சிறுகுறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் குஜராத்தில் மூடப்பட்டன. 2006-7ஆம் ஆண்டு காலத்தில் இந்த எண்ணிக்கை 12%ஆகவும் 2012 மார்ச் 31-ந் தேதி நிலவரப்படி 5% ஆகவும் குறைந்துள்ளது.
அன்னிய நேரடி முதலீடு
கேஜ்ரிவால் பேசியது: நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தால், சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி கொடுப்பார். இதனால் சிறு வர்த்தகர்கள் தங்களது வர்த்தகத்தை வேலைவாய்ப்பை இழக்க நேரிடும்.
குஜராத் அரசு: சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டு கொள்கையை எதிர்ப்பதாக பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5,874 விவசாயிகள் தற்கொலையா?
கேஜ்ரிவால் பேசியது: குஜராத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 5,874 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
குஜராத் அரசு: கேஜ்ரிவால் சொன்னதில் மிகப் பெரிய பொய் இது. அண்மையில் குஜராத்துக்கு கேஜ்ரிவால் பயணம் செய்த போது கடந்த 10 ஆண்டுகளில் 800 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக கூறினார். 15 நாட்களுக்குள் இந்த எண்ணிக்கையை 5,874ஆக உயர்த்திவிட்டார். உண்மையில் கடந்த 10 ஆண்டுகளில் விளைச்சல் குறைவால் ஒரே ஒரு விவசாயி மட்டுமே தற்கொலை செய்து கொண்டார்.
நிலம் கையகப்படுத்துதல்
கேஜ்ரிவால் பேசியது: மோடி ஆட்சிக்கு வந்தால் விவசாய நிலங்கள் பறிக்கப்பட்டு மிகப் பெரிய தொழிற்சாலைகளுக்கு கொடுக்கப்பட்டுவிடும்..
குஜராத் அரசு: குஜராத் அரசின் நிலம் கையகப்படுத்துதல் கொள்கையை உச்சநீதிமன்றமே பாராட்டியிருக்கிறது. நிலத்தின் சந்தை மதிப்பின் அடிப்படையில்தான் விலை நிர்ணயிக்கப்பட்டு தொகை வழங்கப்படுகிறது. அதேபோல் விவசாயிகளின் ஒப்புதலின்றி நிலம் கையகப்படுத்தப்படுவது இல்லை. குஜராத் மாநிலத்தில் நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றது இல்லை. ஏனெனில் விவசாயிகள் நலன் சார்ந்த கொள்கையை குஜராத் அரசு கடைபிடிக்கிறது.