"மசாஜ்" பண்றோம்.. பாகுபலி 2 பார்க்குறோம்.. அப்படியே "எஸ்" ஆகுறோம்.. "ஆத்தாடி" சாமியார்!
அகமதாபாத்: சாமியார என்ற பெயரில் ஏகப்பட்ட சேட்டைகளைச் செய்து வந்த குஜராத்தைச் சேர்ந்த பெண் சாமியார் சாத்வி ஜெய்ஸ்ரீ கிரி, போலீஸாரிடமிருந்து படு நூதனமாக தப்பி ஓடியுள்ளார்.
வடக்கு குஜராத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டவர் ஜெயஸ்ரீ கிரி. சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை மருத்துவப் பரிசோதனைக்காக கூட்டிச் சென்றபோது மருத்துவமனையிலிருந்து தப்பி விட்டார்.
பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டவர் கிரி என்பது குறிப்பிடத்தக்கது.
பரோலில் வந்து சேட்டை
இந்த பெண் சாமியார் மருத்துவப் பரிசோதனைக்காக குறுகிய கால பரோலில் வெளியே வந்தார். வெளியே வந்தவருக்கு நான்கு போலீஸார் பாதுகாப்புக்காக போடப்பட்டனர். இவர்களை தனது வலையில் வீழ்த்தினார் சாமியார்.
ஸ்பாவில் உற்சாகம்
மருத்துவப் பரிசோதனை என்று கூறிக் கொண்டு ஒரு ஸ்பாவுக்குப் போயுள்ளனர். அங்கு பெண் சாமியாருக்கு மசாஜ் கொடுக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து பாகுபலி 2 படம் பார்க்கப் போயுள்ளனர்.
பாகுபலி படத்திற்குப் பிறகு எஸ்கேப்
அதன் பிறகு பெண் சாமியார் மெதுவாக எஸ்கேப் ஆகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்தனர் நான்கு போலீஸாரும். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸ் தற்போது இந்த நான்கு போலீஸாரையும், பெண் சாமியாரின் வக்கீலையும் கைது செய்துள்ளனர்.
கோவிலுக்கு ஓனர்
பெண் சாமியார் ஜெயஸ்ரீக்கு சொந்தமாக கோவில் உள்ளது. டிரஸ்ட்டும் வைத்துள்ளார். நகைக் கடைக்காரரிடம் ரூ. 5 கோடி பணத்தை மோசடி செய்து விட்டு அவரிடம் மேலும் பணம் பறிக்கவும் முயற்சி செய்தபோதுதான் கைதானார்.