கொரோனா தடுப்பூசி போட போங்க.. தங்க மூக்குத்தியோட திரும்பி வாங்க.. குஜராத்தில் அட்ராசக்கை!
அகமதாபாத்: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் பெண்களுக்கு தங்க மூக்குத்தி வழங்கி ஊக்குவித்து வருவது குஜராத் பெண்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை படுவேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
இந்த நிலையில் குஜராத்தில் உள்ள ராஜ்கோட் மாவட்டத்தைச் சேர்ந்த 50 கிராம மக்கள் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக தங்கள் ஊர் பக்கமே வராதீர்கள் என சுகாதாரத் துறை அதிகாரிகளை விரட்டியடித்துள்ளனர்.
தடுப்பூசி
இதுவரை தங்கள் கிராமங்களில் ஒருவருக்குக் கூட தொற்று ஏற்பட்டதில்லை. தங்களுக்கு உடலில் எந்த குறையும் இல்லாத போது எதற்கு தடுப்பூசி என மாவட்ட நிர்வாகத்திற்கு அவர்கள் கடிதமும் எழுதியுள்ளார்கள். உள்ளூர் தெய்வத்திற்கு நாங்கள் படையல் போட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகிறோம்.
பொற்கொல்லர்கள்
அவர்களது ஆசியால் எங்கள் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை. உலகை மிரட்டும் கொரோனாவுக்கே ஆச்சரியம் அளித்து வருகிறார்கள். இப்படிப்பட்ட ராஜ்கோட்டில் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் விதமாக அங்குள்ள பொற்கொல்லர்கள் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பெண்கள்
அதன்படி தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் பெண்களுக்கு இலவசமாக தங்க மூக்குத்தி வழங்கப்படுகிறது. அதே போல் ஆண்களுக்கு சமையலறையில் பயன்படுத்தப்படும் ஹேண்ட் பிளண்டர் போன்ற கருவிகளையும் இலவசமாக வழங்கி வருகிறார்கள். ஊசி போட போனால் காய்ச்சலோடு திரும்புவார்கள் என வதந்தி பரவும் நிலையில் இந்த பெண்கள் தங்க மூக்குத்தியோடு வீடு திரும்புகிறார்கள்.
ஆயிரக்கணக்கானோர்
இதை பார்த்து விட்டு அக்கம்பக்கத்தினரும் போட்டு கொள்கிறார்கள். ராஜ்கோட்டில் தங்க நகை செய்வது குடிசை தொழிலாகவே உள்ள நிலையில் பொதுமக்களின் நலனை சார்ந்து எங்களது தொழிலும் இருப்பதால் அவர்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஊக்குவிக்க இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பொற்கொல்லர்கள் தெரிவித்தனர்.