69 பேர் கொல்லப்பட்ட குல்பர்க் சொசைட்டி படுகொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு 9-ந் தேதி தண்டனை அறிவிப்பு
அகமதாபாத்: குஜராத்தில் 69 பேர் எரித்து கொல்லப்பட்ட குல்பர்க் சொசைட்டி படுகொலை வழக்கில் 24 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் வரும் 9-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ந் தேதி குஜராத்தின் கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிக்கப்பட்டது. இதில் 59 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கு பழிவாங்கும் வகையில் அடுத்த நாள் அகமதாபாத் சமன்பூராவில் உள்ள குல்பர்க் சொசைட்டியில் ஆயிரக்கணக்கானோர் அடங்கிய கும்பல் ஒன்று புகுந்து கொலை வெறித் தாக்குதல் நடத்தியது. இதில் பலர் எரித்தும், கொடூர ஆயுதங்களால் தாக்கியும் கொல்லப்பட்டனர். இதில் காங்கிரஸ் எம்.பி., இசன் ஹாப்ரி உட்பட 69 பேர் உயிரிழந்தார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் 24 பேர் குற்றவாளிகள் என்றும் 36 பேரை விடுதலை செய்தும் அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்னர் தீர்ப்பளித்தது. இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டோரில் பாரதிய ஜனதா கவுன்சிலர் பிபின் பட்டேலும் ஒருவர்.
இவ்வழக்கின் குற்றவாளிகளுக்கு இன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. ஆனால் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் வரும் 9-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications