கலவரத்தை தூண்டும் பேச்சுக்காக சு.சுவாமிக்கு எதிராக விசாரணை தேவை - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு!!
டெல்லி: இந்துக்கள் - முஸ்லிம்களிடையே வெறுப்பை தூண்டும் வகையில் பேசியதற்காக சுப்பிரமணியன் சுவாமி மீது தொடரப்பட்ட வழக்குகளில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அதிரடியாக வலியுறுத்தியுள்ளது.
பாரதிய ஜனதாவைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி மீது இந்துக்கள்- முஸ்லிம்கள் இடையே வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசியதாக டெல்லி, மும்பை, அஸ்ஸாம், மொகாலி மற்றும் திருவனந்தபுரம் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் அஸ்ஸாம் நீதிமன்றம் சுப்பிரமணியன் சுவாமிக்கு பிடிவாரண்ட் கூட பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் "வெறுப்பைத் தூண்டும் பேச்சு"க்கு தண்டனை வழங்கக் கூடிய சட்டப் பிரிவுகளுக்கு எதிராக சுப்பிரமணியன் சுவாமி மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் தாம் 2007ஆம் ஆண்டு எழுதிய பயங்கரவாதம் தொடர்பான புத்தகத்துக்கு எதிரான வழக்குகளுக்கும் அவர் தடை கோரியிருந்தார்.
இந்த மனுக்கள் மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தததால் சு.சுவாமியும் அனைத்து கைது நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து வந்தார். மேலும் சுப்பிரமணியன் சுவாமி மனு மீது பதிலளிக்குமாறு உள்துறை அமைச்சகத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதை ஏற்று உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வெறுப்பைத் தூண்டும் பேச்சுகளை ஒருபோதும் அனுமதிக்கவே முடியாது. இத்தகைய பேச்சுகளுக்கு தண்டனை வழங்கக் கூடிய ஐ.பி.சி. சட்டப் பிரிவுகள் மிகவும் சரியானவையே.
இந்தியாவின் குடிமக்களிடையே வெறுப்பைத் தூண்டும் பேச்சுகளை நாம் அனுமதித்தால் மிக மோசமான நாசத்தையே ஏற்படுத்தும். இதனால் கலவரங்கள் ஏற்படும். சமூக அமைதியைப் பாதிக்கும் வகையில் நல்லிணக்கம் மிகவும் சீர்குலைந்து போய்விடும்.
பல்வேறு ஜாதி, மதங்களைச் சேர்ந்த அனைத்து தரப்பினரும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதையே நமது அரசியல் சாசனம் வலியுறுத்துகிறது. அமைதியை நிலைநாட்டவும் சமூக நல்லிணக்கத்தை கடைபிடிக்கவும் நமது அரசியல் சாசனம் விதித்துள்ள நியாயமான சில கட்டுப்பாடுகளையும் சட்டப்பிரிவுகளையும் கேள்விக்குள்ளாக முடியாது.
வெறுப்பு பேச்சுகளை பேசுவோருக்கு சட்டப்படி உரிய தண்டனை வழங்க வேண்டும். மேலும் சுப்பிரமணியன் சுவாமி 2007ஆம் ஆண்டு பயங்கரவாதம் தொடர்பாக ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அந்தப் புத்தகம் முழுவதுமே இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பகைமையை ஏற்படுத்தும் வகையில்தான் அமைந்துள்ளது. இந்த நூலை எழுதிய சுப்பிரமணியன் சுவாமி சட்டத்தை முழுவதுமாக மீறியுள்ளார்.
ஆகையால் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து அவர் மீதான வழக்கில் விசாரணையை தொடர்ந்து நடத்த வேண்டும்.
இவ்வாறு உள்துறை அமைச்சகம் தமது பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது.
சுப்பிரமணியன் சுவாமி மற்றும் மத்திய அமைச்சர்கள், இந்துத்துவா அமைப்பினர் தொடர்ந்து வெறுப்பைத் தூண்டும் பேச்சுகளை பேசி வரும் நிலையில் மத்திய அரசு இத்தகைய வழக்குகளில் உரிய விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.