காந்தி 'படுகொலையாளன்' கோட்சே தூக்கிலிடப்பட்ட நாள் தியாகிகள் தினமாம்.... சொல்வது இந்து மகாசபா
மும்பை: தேசத் தந்தை மகாத்மா காந்தியை சுட்டுப் படுகொலை செய்த பயங்கரவாதி கோட்சே தூக்கிலிடப்பட்ட நாளை தியாகிகள் தினமாக கடைபிடிக்கப் போவதாக அகில பாரத இந்து மகாசபையின் தலைவர் சந்திர பிரகாஷ் கெளசிக் அறிவித்துள்ளார்.
தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளை 1948ஆம் ஆண்டு ஜனவரி 30-ந் தேதியன்று சுட்டுப் படுகொலை செய்தவன் வலதுசாரி இந்துத்துவா பயங்கரவாதி கோட்சே. காந்தி படுகொலை வழக்கில் கோட்சே 1949ஆம் ஆண்டு நவம்பர் 15-ந் தேதியன்று தூக்கிலிடப்பட்டான்.
இவனுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்ட ஒரே வாரத்தில் தண்டனை நிறைவேற்றப்பட்டது. தற்போது மத்தியில் பாரதிய ஜனதா அரசு அமைந்த உடனேயே தேசத் தந்தையை படுகொலை செய்த கோட்சேவுக்கு சிலைவைப்போம் என வலதுசாரி இந்துத்துவா அமைப்பான இந்துமகா சபா கூற மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
இந்த நிலையில் கோட்சே தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்ட நவம்பர் 15-ந் தேதியை 'தியாகிகள் தினமாக' கொண்டாடப் போவதாக இந்து மகாசபா அறிவித்துள்ளது. இது குறித்து அதன் தலைவர் சந்திர பிரகாஷ் கெளசிக் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து தேசியவாதியான நாதுராம் கோட்சே தூக்கிலிடப்பட்ட நவம்பர் 15-ந் தேதி தியாகிகள் தினமாக கடைப்பிடிக்கப்படும். அன்றைய தினம் நாடு முழுவதும் மாவட்ட அளவில் கோட்சே நினைவு தினம் கடைப்பிடிக்கப்படும்; ரத்ததான முகாம்கள் நடத்தி அரசு மருத்துவ மனைகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காந்தி படுகொலையை நியாயப்படுத்தும் புத்தகங்களையும் அன்றைய தினம் விநியோகிக்கப் போவதாகவும் அந்த இயக்கம் அறிவித்துள்ளது.