சீனாவுடனான போரில் இந்தியா ஏன் தோல்வியை தழுவியது? ஆவணவம் சொல்வது இதுதான்..
டெல்லி: 1962ஆம் ஆண்டு சீனாவுடனான யுத்தத்தில் இந்தியா போரில் இறங்கியதற்கும் சரியான கணிப்புகளின்றி போரில் ஈடுபட்டதற்கும் அப்போதைய பிரதமர் நேருதான் காரணம் என்கிறது சர்ச்சைக்குரிய ரகசிய ஆவணங்கள்.
மத்திய அரசு வசம் உள்ள ரகசிய ஆவணங்களை அப்போதைய போரின் போது டெல்லியில் பணியாற்றிய ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் மேக்ஸ்வெல் திடீரென தமது இணையதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மேக்ஸ்வெல் வெளியிட்ட ராணுவ ரகசிய ஆவணங்களில் அப்படி என்னதான் கூறப்பட்டுள்ளது?
போதுமான பலம் இல்லை..
நமது ராணுவம் போதுமான பலத்தைக் கொண்டிருக்கவில்லை.. ஆனால் சீனா எதிர்நடவடிக்கைகளை மேற்கொள்ளாது என்றுதான் இந்தியா கருதி போர் நடவடிக்கைகளை விரிவாக்கம் செய்தது.
சரியான திட்டமிடல் இல்லை..
போரின் போது ராணுவ தளபதிகள் பாராட்டும்படியாக எந்த ஒரு உயர்நிலை முடிவும் இருக்கவில்லை.. அத்துடன் ஒட்டுமொத்த சீனாவின் ஊடுருவலை முறியடிக்கும் வகையிலான திட்டமும் வகுக்கப்படவில்லை.
ரகசிய கூட்டங்கள்,,
எல்லைப் பகுதிகளில் அதிகளவில் ராணுவ முகாம்களை அமைக்கவும், அங்கு ரோந்து பணியை தீவிரப்படுத்தவும் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவும், ராணுவ தலைமையகமும், இந்திய புலனாய்வு இயக்குனரும் சேர்ந்து முடிவு செய்தனர். இது தொடர்பாக பலமுறை ரகசிய கூட்டம் நடைபெற்றது.
ராணுவ புலனாய்வின் கணிப்பு வேற..
ஆனால் ராணுவ புலனாய்வு அமைப்பினரோ, புதிய ராணுவ நிலைகளை அமைத்தால் நிச்சயம் அதை சீனா தடுத்து தாக்குதல் நடத்தும் என்று எச்சரித்திருந்தது.
சீனா தாக்குதல் நடத்தாதாம்.
இந்திய ராணுவம் எல்லைப் பகுதிகளில் முன்னேறி சென்றாலும் சீன ராணுவம் பெரிய அளவில் எதிர்ப்பு காட்டாது- தாக்குதல் நடத்தாது என்றும் கணிக்கப்பட்டது. ஆனால் ராணுவ மேற்கு மண்டல தளபதி இந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
தயாரில்லா இந்திய ராணுவம்
சீனா தாக்குதலில் ஈடுபட்டால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நமது ராணுவம் தயார்நிலையில் இல்லை என்றும், யுத்தம் மூண்டால் இந்திய ராணுவம் படுதோல்வியை சந்திக்க நேரிடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
ஜெனரல் கெளல் வார்னிங்
அதேபோல் சீனா நம் மீது தாக்குதல் நடத்திய காலத்தில் ஆயுத பலமின்மை, ஆட் பலமின்மை போன்ற பல குறைபாடுகள் குறித்து ஜெனரல் கெளல் 1961-62ஆம் ஆண்டு காலப் பகுதியில் தமது அறிக்கையில் பல முறை அரசுக்கு சுட்டிக்காட்டியிருந்தார்.
களநிலைமையே வேறு
பாதுகாப்பு அமைச்சகத்தின் நெருக்குதலால் பலமற்ற நிலையிலும் சீன படைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இந்திய ராணுவம் இருந்தது. களநிலைமையை புரிந்து கொள்ளாமல் வெறும் ஆலோசனைக் கூட்டங்களில் ராணுவ நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதன் மூலம் பெரும் பின்னடைவை எதிர்கொள்ளவும் நேரிட்டது.
நேருதான் காரணம்..
அதாவது சீனாவுடனான போரில் இந்தியா தோற்றுவிடுவோம் என்பதுதான் யதார்த்தமான நிலையாக இருந்தது. ஆனாலும் இந்த யதார்த்ததைப் புரிந்து கொள்ளாமல் நேரு போரில் ராணுவத்தை ஈடுபட வைத்தார். அதனால் இந்திய ராணுவமும் தோல்வியைத் தழுவ நேரிட்டது.
இதுதான் ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் மேக்ஸ்வெல் வெளியிட்டிருக்கும் ஆவணத்தின் சாராம்சமாகும்.