ஈரானின் சபஹார் துறைமுகத்தில் கால்பதித்த இந்தியா.... சீனா- பாக். கூட்டணி அலறல்
டெல்லி: ஈரானின் சபஹார் துறைமுகத்தை மேம்படுத்தும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டிருப்பது சீனா மற்றும் அதன் நட்புநாடான பாகிஸ்தானை அலற வைத்துள்ளது. சர்வதேச வர்த்தக வழித்தடத்தில் சபஹார் துறைமுகம் புதிய அத்தியாயத்தை உருவாக்க இருப்பதால் உலக நாடுகள் இந்தியாவை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
இந்தியாவும் சீனாவும் எண்ணெய் மற்றும் எரிவாயுக்காக மத்திய கிழக்கு நாடுகளைத்தான் நம்பி இருக்கின்றன. இதில் சீனாவின் கடல்வழிப் பயணம் என்பது மிக நீண்டது. அரபிக் கடல், இந்தியப் பெருங்கடல்...மலேசியாவின் மலக்கா ஜலசந்தி என நெடும்பயணத்துக்கு பின்னரே சீனாவுக்கு கப்பல்கள் சென்று சேர முடியும்.
இக்கடல் வழிப் பயணத்தில் எந்த ஒரு முட்டுக்கட்டையும் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் 1980-களில் முத்துமாலை திட்டத்தை சீனா உருவாக்கியது. இக்கடல் வழியில் இருக்கும் நாடுகளின் துறைமுகங்களில் கால்பதித்து தம்முடைய ஆதிக்கத்தை நிலைநாட்ட்டிக் கொள்வதுதான் இதன் நோக்கம். இத்திட்டத்தின் பெரும்பகுதியை சீனா நிறைவேற்றிவிட்டது. இதில் கடைசி அத்தியாயமாக பாகிஸ்தான் கவ்தார் துறைமுகத்தில் கால்பதித்து நின்றது சீனா. கவ்தார் துறைமுகமானது சீனாவின் மற்றொரு பகுதியுடன் ரயில் பாதை மூலமாக இணைக்கப்பட்டு உள்ளது.
சூயஸ் வழி பயணம்
இந்தியாவைப் பொறுத்தவரையில் வளைகுடா வர்த்தகமாக இருந்தாலும் மத்திய ஆசிய நாடுகள், ஐரோப்பாவின் வர்த்தகம் எதுவானாலும் சர்வதேச வடக்கு தெற்கு காரிடார் எனப்படும் சூயஸ் கால்வாய் வழியாகத்தான் நடைபெற்று வருகிறது. இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்குமான வர்த்தக தொடர்பு பாகிஸ்தான் மாகாணங்கள் வழியாகத்தான் இருந்து வருகிறது.
பாகிஸ்தானை நம்ப தேவை இல்லை
தற்போது சீனா கட்டுப்பாட்டில் இருக்கும் கவ்தார் துறைமுகத்தில் இருந்து 72 கி.மீ தொலைவில் ஈரானில் இருக்கும் சபஹார் துறைமுகத்தில் இந்தியா கால்பதித்திருக்கிறது. இந்த துறைமுகத்தை மேம்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டுவந்தால் இந்தியாவின் சர்வதேச வர்த்தக தொடர்புகள் மிக எளிதான ஒன்றாகிவிடும். முதலில் ஆப்கானிஸ்தானுடனான வர்த்தக உறவுகளுக்கு பாகிஸ்தானின் தரைவழியை நம்ப வேண்டியதில்லை.
சபஹார் துறைமுகம்
ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களை இணைக்கும் ரயில் பாதைகளை இந்தியாதான் அமைத்துக் கொடுத்திருக்கிறது. இந்த ரயில் மார்க்கம் மூலாக ஈரானை எளிதில் அடையலாம். அங்கிருந்து சபஹார் துறைமுகத்தை எட்டிவிட்டால் நேராக மும்பை துறைமுகத்துக்கு வந்தடையலாம்.
இந்தியாவுக்கு பலம்
இதற்கு அப்பால் சூயஸ் கால்வாயை சுற்றி வரும் சர்வதேச வடக்கு தெற்கு காரிடார் திசையே மாறவும் வாய்ப்பிருக்கிறது. சபஹார் துறைமுகத்தில் இருந்து அஜர்பைஜான், ரஷ்யா, கஜகஸ்தான் ஆகிய நாடுகளை ரயில் மார்க்கமாகவே இந்தியா எட்டிவிட முடியும். இது இந்திய தொழில்துறைக்கு மிகப் பெரிய பலமாக அமையும். வர்த்தக கப்பல்களின் பயண நாட்கள், எரிபொருள் செலவு ஆகியவை கணிசமான அளவு குறையும்.
வயிற்றெரிச்சலில் சீனா, பாக்
அதே நேரத்தில் அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீண்டும் சர்வதேச நாடுகளுடன் மோதல் போக்கை கடைபிடித்தால் இந்தியாவின் முதலீடும் நம்பிக்கையும் தகர்ந்து போய்விடும் அபாயமும் இருக்கிறது. இதை சுட்டிக்காட்டிதான் சீனா, பாகிஸ்தான் ஊடகங்கள் 'நாங்கள் பொறாமைப்படவில்லை; யதார்த்தத்தைச் சொல்லுகிறோம்' என வயிற்றெரிச்சலுடன் சபஹார் துறைமுக திட்டம் குறித்து எழுதித் தள்ளுகின்றன. இந்தியா ஏமாறப் போகிறது என்றெல்லாம் கூட எழுதி கொட்டி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.