அனுமதி மறுப்பு: ராஜ்பாத்திலிருந்து யோகா செய்யாமல் திரும்பிச் சென்ற நூற்றுக்கணக்கானோர்
டெல்லி: டெல்லி ராஜ்பாத்தில் நடந்த யோகா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த நூற்றுக்கணக்கானோர் அனுமதி மறுக்கப்பட்டதால் திரும்பிச் சென்றனர்.
சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் உள்ள ராஜ்பாத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யோகா செய்தனர்.
இந்நிலையில் யோகா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ராஜ்பாத் வந்த நூற்றுக்கணக்கானோர் அனுமதி மறுக்கப்பட்டதால் திரும்பிச் சென்றுள்ளனர். ராஜ்பாத் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதி சீட்டு பெற வேண்டும் என்பது பலருக்கு தெரியாமல் போனது.
இது குறித்து ராஜஸ்தான் மாநிலம் ஜாலோரைச் சேர்ந்த போக்ராராம் பிஷ்னோய்(70) கூறுகையில்,
நான் 18 வயதில் இருந்து யோகா செய்கிறேன். கடந்த 18 ஆண்டுகளாக நான் பால் மற்றும் பழங்களை சாப்பிட்டு தான் உயிர் வாழ்ந்து வருகிறேன். ராஜ்பாத் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. நான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வெள்ளிக்கிழமையே டெல்லி வந்தேன். எவ்வளவோ முயன்றும் அனுமதிச் சீட்டு கிடைக்கவில்லை என்றார்.
உருகுவேவில் இருந்து வந்த ஒரு குழுவுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.