குஜராத் தேர்தல் கருத்துக்கணிப்பு.. "பாசிட்டிவ்வாக எடுத்துக்க வேண்டியதுதான்".. சமாளித்த கெஜ்ரிவால்
காந்திநகர்: குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கான கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாக வந்துள்ள நிலையில், "இதையெல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்ளக்கூடாது.. பாசிட்டிவாக எடுத்துக்கொள்ள வேண்டும்" என ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்கும் என கருதப்பட்ட ஆம் ஆத்மி, அங்கு படுதோல்வியை சந்திக்கப் போவதாக கருத்துக்கணிப்பு வந்திருக்கும் சூழலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளால் துவண்டு போயிருக்கும் ஆம் ஆத்மி தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக அவர் இவ்வாறு கூறியுள்ளதாக தெரிகிறது.

கூட்டம்.. வாக்குகள் அல்ல
குஜராத்தில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. மொத்தமுள்ள 181 தொகுதிகளில் 92 தொகுதிகளை கைப்பற்றும் கட்சியே அங்கு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க முடியும். குஜராத்தை பொறுத்தவரை 27 ஆண்டுகளுக்கும் மேலாக அது பாஜகவின் கோட்டையாக உள்ளது. ஆனால், இந்த முறை புதிதாக களம் இறங்கிய ஆம் ஆத்மிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்பட்டது. அர்விந்த் கேஜ்ரிவால் செல்லும் இடங்களில் எல்லாம் அதிக அளவில் கூட்டம் கூடியது. இதனால் இந்த முறை பாஜகவை ஆம் ஆத்மி தோற்கடித்து விடும் என சில அரசியல் நிபுணர்கள் கூட தெரிவித்து வந்தனர்.

தலைகீழாக வந்த கருத்துக்கணிப்புகள்
குஜராத்தில் பாஜகவை ஆம் ஆத்மி வீழ்த்தும்.. அப்படியில்லை எனில், காங்கிரஸை பின்னுக்குள் தள்ளி பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தையாவது அக்கட்சி பிடிக்கும் என்றும் பல ஊடகங்கள் தெரிவித்து வந்தன. ஆனால், நேற்று வந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் இவை அனைத்துக்கும் தலைகீழாக இருந்தது. குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பாஜக 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி அசுர பலத்துடன் ஆட்சியை பிடிக்கும் என்றே பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.

ஆம் ஆத்மிக்கு படுதோல்வி
சரி., பாஜக ஆட்சியை பிடித்தால் பிடிக்கட்டும். ஆம் ஆத்மி அதற்கு அடுத்த இடத்திலாவது இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. வெறும் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே அதாவது 7-8 இடங்களை மட்டுமே ஆம் ஆத்மி வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்டிருந்தன. இதனால் குஜராத்தில் பெரும் நம்பிக்கையுடன் இருந்த ஆம் ஆத்மி நிர்வாகிகளும், தொண்டர்களும் சோர்ந்து போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

"பாசிட்டிவ்வா எடுத்துக்கோங்க"..
இந்நிலையில், இந்தக் கருத்துக்கணிப்பு குறித்து அர்விந்த் கேஜ்ரிவாலிடம் இன்று நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "இந்த முடிவுகளை நான் பாசிட்டிவாகவே எடுத்துக்கொள்கிறேன். ஆண்டாண்டு காலமாக பாஜகவின் கோட்டையாக உள்ள குஜராத்தில், புதிதாக களமிறங்கி 15 - 20 சதவீதம் வாக்குகளை பெறுவது சாதாரண விஷயம் அல்ல. ஆனாலும், இப்போது வெளியாகி இருப்பது கருத்துக்கணிப்பு முடிவுகள்தான். நாளை மறுநாள் தேர்தல் முடிவுகள் வரும் வரை காத்திருங்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications