நான் கொலை செய்யவில்லை.. சிபிஐ என்னை மிரட்டியது.. டெல்லி பள்ளி மாணவன் கொலையில் சக மாணவன் பல்டி
டெல்லியை சேர்ந்த தனியார் பள்ளியில் நடந்த கொலையில் முதலில் கொலையை ஒப்புக் கொண்ட மாணவன் இப்போது செய்யவில்லை என பல்டி அடித்து இருக்கிறான்.
Recommended Video
டெல்லி: இரண்டு மாதங்களுக்கு முன்பு டெல்லியை சேர்ந்த தனியார் பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு மாணவன் ஒருவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டான். கழுத்தறுக்கப்பட்டு மரணம் அடைந்த அந்த சிறுவனின் பெயர் பிரத்தியுமான் தாக்குர்.
தனியார் பள்ளியில் நடந்த இந்த கொலையில் முதலில் அந்த பள்ளியின் பஸ் கண்டெக்டர் கைது செய்யப்பட்டார். ஆனால் அந்த கொலையை செய்தது அதே பள்ளியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவன் என கூறப்பட்டது. அந்த மாணவன் தான் செய்த கொலையை ஒப்புக் கொண்டான்.
ஆனால் தற்போது அந்த கொலையை நான் செய்யவில்லை என சிபிஐ சிறப்பு அதிகாரிகளிடம் அவன் மாற்றி கூறி இருக்கிறான். இதனால் சிபிஐக்கு பின்னடைவு ஏற்பட்டு இருக்கிறது.
பள்ளி கழிவறையில் கொலை
டெல்லியின் குர்கான் பகுதியில் இருக்கும் ரேயான் இண்டர்நேஷனல் பள்ளியில் இரண்டு மாதங்களுக்கு முன்பு பிரத்தியுமான் தாக்குர் என்ற மாணவன் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டான். இதையடுத்து போலீசார் அந்த கொலை குறித்து விசாரணை செய்தனர். முதலில் அந்த பள்ளியின் கண்டெக்டர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
பள்ளி மாணவனும் சம்பந்தம்
சில நாட்களுக்கு முன் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. அதன்பின் இந்த கொலைக்கு காரணம் என அதே பள்ளியில் படிக்கும் 11ம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டான். மேலும் இந்த கொலை சம்பவத்தில் அந்த பள்ளியின் கண்டெக்டருக்கு எந்த விதத்திலும் தொடர்பு இல்லை என சிபிஐ கூறியது. போலீஸ் வேண்டுமென்றே வழக்கை ஜோடித்ததாக கூறியது.
கொலையை ஒப்புக் கொண்டான்
சிபிஐ நடத்திய விசாரணையில் கொலை செய்த 11ம் வகுப்பு மாணவன் தனது கொலையை ஒப்புக் கொண்டான். மேலும் அவன் தான் கொலை செய்ததை விளக்கும் போது அந்த இடத்தில் அவனது பெற்றோர்களும், மூன்றாம் நபர் ஒருவரும் இருந்து இருக்கின்றனர். இதையடுத்து இந்த வழக்கில் எல்லா முடிச்சுகளும் அவிழ்க்கப்பட்டுவிட்டதாக சிபிஐ கூறியது.
மாற்றி பேசிய சிறுவன்
இந்த சிறுவனின் வாக்குமூலத்தை கேட்பதற்காக மத்திய அரசின் குழந்தைகள் நல அமைப்பில் இருந்து அதிகாரிகள் வந்து இருந்தனர். சட்டப்படி அவர்கள் இவனது வாக்குமூலத்தை கேட்டுவிட்டு சான்று அளிக்க வேண்டியது அவசியம். ஆனால் இவர்கள் முன்னிலையில் பேசிய அந்த சிறுவன் ''நான் கொலை செய்யவில்லை. என்னை கட்டாயப்படுத்தி சிபிஐ ஒப்புக்கொள்ள சொல்லியது'' என கூறியிருக்கிறான். இதனால் போலீஸ் மீது இருந்த பழிச் சொல் தற்போது சிபிஐ பக்கம் திரும்பி இருக்கிறது.