'பாதுகாப்புதான் பிரச்சினை என்றால் சசிகலாவை திகார் சிறைக்கு மாற்றலாமே!'
பெங்களூர்: பாதுகாப்பு காரணங்களுக்காகத்தான் சசிகலாவை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்றால், அவரை டெல்லி திகார் சிறைக்கு மாற்றலாம். அதைவிட பாதுகாப்பான சிறை இந்தியாவில் இல்லை என்று கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ 10 கோடி அபராதம் விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் சசிகலாவுக்கு பெங்களூர் சிறையில் பாதுகாப்பில்லை என்றும், அவரை சென்னை சிறைக்கு மாற்றவும் கோரி வருகின்றனர்.
சசிகலா எந்த சிறையில் இருக்க வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டியது நீதிமன்றம். எந்த தனி நபரும் தீர்மானிக்க முடியாது. ஒருவேளை சிறை மாற்றத்துக்கு கர்நாடக அரசு சம்மதித்தாலும், சிறப்பு நீதிமன்றம் மூலமே இதை முடிவு செய்ய முடியும். சிறப்பு நீதிமன்றம் மறுத்துவிட்டால் கர்நாடக உயர் நீதிமன்றம், அங்கும் முடியாவிட்டால் உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டி இருக்கும்.
பாதுகாப்பு காரணங்களைக் காட்டி சிறை மாற்றத்துக்கு சசிகலா கோரினால், அவரை திகார் சிறைக்கு வேண்டுமானால் மாற்றலாம். காரணம் இந்தியாவிலேயே நவீன, பாதுகாப்பான சிறை திகார்தான் என்கிறார்கள் சிறைத் துறை அதிகாரிகள்.
ஆனால் உளவுத் துறையின் அறிக்கைப் படி, கர்நாடக சிறையில் சசிகலாவுக்கு, அவருடன் தண்டனை பெற்றுள்ள இளவரசி மற்றும் சுதாகரனுக்கோ எந்த வித ஆபத்தும் இல்லை.
'தமிழக சிறைக்கு மாற்றல் கோருவது, இங்கு சகல வசதிகளுடனும் இருக்கலாம் என்ற ஒரே காரணம்தான். காரணம் தமிழகத்தில் இப்போது நடப்பது அவர்களின் ஆட்சிதான்' என்று கர்நாடக அரசு வாதிட்டால் அதை நீதிமன்றங்கள் ஏற்றுக் கொள்ளும் சூழல் உள்ளது என்கிறார்கள் சிறைத் துறை அதிகாரிகள்.












Click it and Unblock the Notifications