4 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு சலுகைகள் கட்.. இந்தியாவில் தான்.. எந்த மாநிலம் தெரியுமா?
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் நான்கு குழந்தைகளுக்கு மேல் கொண்ட குடும்பங்களுக்கு அரசின் சலுகைகள் நிறுத்தப்படும் என்றும் அதற்கான அவசர சட்டத்தை பிறப்பிக்க முதல்வர் என் பிரேன் சிங் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகள் பட்டியலில் உலகில் இந்தியா 2 ஆம் இடத்தில் உள்ளது.
சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. சீனாவில் மக்கள் அதிகம் என்றாலும் அங்கு மக்கள் அடர்த்தி குறைவு தான்.
மேற்கு வங்கம், மணிப்பூர் மாநில ஆளுநர் இல.கணேசன் மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?
2027-க்குள் சீனாவை பின்னுக்கு..
இந்தியாவில் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வரும் 2027- ஆம் ஆண்டுக்குள் இந்த பட்டியலில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடித்து விடும் என்று சொல்லப்படுகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவின் மக்கள் தொகை 130 கோடியை தாண்டிவிட்டது. நாட்டில் பெருகி வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்து வருகின்றன.
அவசர சட்டத்துக்கு ஒப்புதல்
இந்த நிலையில், வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நான்கு குழந்தைகளுக்கு மேல் கொண்ட குடும்பங்களுக்கு அரசின் சலுகைகள் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கான அவசர சட்டத்தை பிறப்பிக்க முதல்வர் என் பிரேன் சிங் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அரசின் சலுகை கிடைக்காது
மணிப்பூர் மாநில மக்கள் தொகை ஆணையம் சட்டத்தின் படி, இந்த சட்டம் அமலுக்கு வந்த பிறகு, எந்த ஒரு தம்பதிக்கும் நான்கு குழந்தைகள் மேல் இருந்தால் அந்த குடும்பத்தில் எந்த ஒரு உறுப்பினருக்கும் அரசின் சலுகை கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மணிப்பூர் சட்டமன்றத்தில் தனிநபர் மசோதா கொண்டு வரப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு இருந்த நிலையில், இன்று அமைச்சரவையில் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
250 சதவீதம் உயர்வு
மணிப்பூரில் கடந்த 2011- ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி அங்குள்ள மக்கள் தொகை 28.56 லட்சமாக உள்ளது. பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ குமுச்சாம் ஜாய்கிஷான் என்பவர் வெளிமாநிலங்களில் இருந்து மணிப்பூரில் அதிக நபர்கள் ஊடுருவதாக குற்றம் சாட்டினார். 1971-2001 வரை மணிப்பூரில் மக்கள் தொகை வளர்ச்சி 153.3 சதவீதம் ஆக இருந்தது என்றும் ஆனால், 2001-2011 கால கட்டங்களில் இந்த எண்ணிக்கை 250 சதவிகிதமாக உயர்ந்து இருப்பதாக குற்றம் சாட்டினார்.
அசாமில் 2 குழந்தைகளுக்கு மேல்..
மணிப்பூரின் அண்டை மாநிலமான அசாம் மாநிலத்தில், கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொள்பவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது நினைவு கொள்ளத்தக்கது.