அக்டோபரில் காந்தி படுகொலை.. அமெரிக்கா மீது குண்டு போட்ட ஜப்பான்- இது குஜராத் பாட புத்தகத்தில்!
அகமதாபாத்: குஜராத் மாநில அரசின் பாடப் புத்தகங்களில் மகாத்மா காந்தி அக்டோபர் 30-ந் தேதி கொல்லப்பட்டார்; அமெரிக்கா மீது ஜப்பான் குண்டு போட்டது போன்ற அபத்தங்கள் ஏராளமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து தவறுகளை நீக்க குழு ஒன்றையும் அம்மாநில அரசு நியமித்துள்ளது.
குஜராத் மாநில அரசின் பாடப் புத்தகங்கள் பலவற்றிலும் ஏராளமான அடிப்படை தவறுகள், எழுத்துப் பிழைகள் இருப்பதாக சர்ச்சை வெடித்துள்ளது. 8வது சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் மட்டுமே இப்படி 120 தவறுகள் இருக்கின்றனவாம்.
இவற்றில் குறிப்பாக சொல்லப்படுவது, 1948ஆம் ஆண்டு அக்டோபர் 30-ந் தேதியன்று காந்தி கொல்லப்பட்டார், இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கா மீது ஜப்பான் குண்டு வீசியது, பால கங்காதர திலகர் மராத்தி என்ற பெயரில் ஆங்கில நாளேடு நடத்தினார், மரங்களை வெட்டும் போது சிஓ3 எனும் நச்சுவாயு அதிகமாக வெளிப்படும், பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய இஸ்லாமாபாத் தேசம் இப்படியெல்லாம் நீண்டு போகிறது அபத்தங்கள்.
இது அம்மாநில அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அம்மாநில கல்வி அமைச்சர் பூபேந்திரசிங் சுதசமா, இந்த தவறுகளை களைய இரு நபர் குழு அமைத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.