டெல்லியில் மறுதேர்தலைத் தவிர்க்கவே ஆம் ஆத்மிக்கு ஆதரவு அளித்தோம்: காங்கிரஸ் தகவல்
டெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி அரசின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அந்த கட்சிக்கு அளிக்கப்பட்டுள்ள ஆதரவை உடனடியாக விலக்கிக் கொள்ளப் போவதில்லை என்றும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
கட்சி ஆரம்பித்த ஓராண்டிற்குள் டெல்லியில் ஆட்சி அமைக்கும் அளவிற்கு மக்களிடையே ஆதரவைப் பெற்றக் கட்சியான ஆம் ஆத்மியின் சமீபத்திய நடவடிக்கைகள் பல விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளன. அதிலும் குறிப்பாக, கடந்த 25-ந் தேதி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நாட்டு மக்களுக்கு ஆற்றிய குடியரசு தின உரையில், ‘விளம்பரம் தேடும் நோக்கத்தில் நடத்தப்படும் கலகங்கள், ஆட்சி திறன் ஆகாது' என அரவிந்த் கெஜ்ரிவாலின் போராட்டத்தை பெயர் குறிப்பிடாமல் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி குடியரசுத் தலைவரின் கண்டனத்திற்கும், விமர்சனத்திற்கும் ஆளாகியிருப்பது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி. மேலும், இது குறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் முகுல் வாஸ்னிக் கூறியிருப்பதாவது :-
பல்வேறு விஷயங்களை ஆராய்ந்த பின்னரே ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவளித்துள்ளோம். அதனால் அந்த கட்சியின் நடவடிக்கைகளை பொறுமையாக கவனித்து வருகிறோம்' என்றார்.
அதே சமயத்தில், சோம்நாத் பார்தி குடியரசுத்தலைவரை விமர்சிக்கும் வகையில் டுவிட்டர் பக்கத்தில் பதில் கருத்து வெளியிட்டதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ‘குடியரசுத்தலைவர் ஒரு ராஜதந்திரி. அவரது கருத்து, எல்லோருக்கும் வழிகாட்டும். அவரது கருத்தை விமர்சிப்பது முறையல்ல' என முகுல் தெரிவித்துள்ளார்.
மேலும், டெல்லியில் மறு தேர்தல் நடைபெறுவதை தவிர்க்கவே ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவளிக்கப்பட்டதாகவும் முகுல் வாஸ்னிக் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.