இந்திய - அமெரிக்க உறவில் புதிய அத்தியாயம்... ஒபாமா வருகை குறித்து டுவிட்டரில் மோடி கருத்து
டெல்லி: அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்தியப் பயணம், இரு தரப்பு உறவில் புதிய அத்தியாயத்தை தொடக்கி வைத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
66வது குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக மூன்று நாள் பயணமாக இந்தியா வந்திருந்தார் அமெரிக்க அதிபர் ஒபாமா. பிரதமர் மோடியுடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ஒபாமா நேற்று சவுதி அரேபியா புறப்பட்டுச் சென்றார்.
இந்த சந்திப்பின் போது, ஒபாமாவும், மோடியும் தங்களை நெருங்கிய நண்பர்கள் எனக் குறிப்பிட்டுக் கொண்டனர். அவர்களது செயல்பாடுகளும் அவ்வண்ணமே இருந்தது.
Farewell @WhiteHouse! Your visit has taken India-USA ties to a new level & opened a new chapter. Wish you a safe journey.
— Narendra Modi (@narendramodi) January 27, 2015
மோடியுடன் ஒபாமா இணைந்து உரையாற்றிய ‘மன் கி பாத்' நிகழ்ச்சி நேற்று வானொலியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
ஒபாமா சவுதி அரேபியா சென்றிருப்பதால் இந்த வானொலி உரையை அவர் கேட்க வாய்ப்பில்லை என அதன் ஆடியோ மற்றும் அப்போது எடுக்கப் பட்ட புகைப்படங்களை அவருக்கு அனுப்பியுள்ளார் மோடி.
மேலும், ஒபாமாவின் இந்தியப் பயணம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது, ‘உங்களது (ஒபாமா) பயணம், இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவை புதிய கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளது. இது, இரு நாடுகளின் உறவில் புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்துள்ளது.
டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சியின்போது மழை பெய்தது, ஒபாமாவுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியது. இதனால், குடையை தனது கையில் ஒபாமா கொண்டு வர வேண்டியதாகிவிட்டது.
அமெரிக்கப் பாடகர் மரியன் ஆண்டர்சன் 1957ஆம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தபோது அகில இந்திய வானொலிக்கு அளித்த பேட்டி, பதிவு செய்யப்பட்ட விடியோ காட்சிகளின் நகல்களை ஒபாமாவிடம் பரிசாக அளித்தேன்' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையின் நன்றி :
இதேபோல், அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை, ஒபாமாவின் இந்தியப் பயணத்தை வெற்றிகரமாக்கியதற்காக பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, சுட்டுரை சமூக வலைதளப் பக்கத்தில் வெள்ளை மாளிகை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், "இந்த பயணம் வெற்றிகரமானதாக அமைந்ததற்கு, நரேந்திர மோடிக்கு நன்றி; சிறப்பான வரவேற்பு அளித்த இந்திய மக்களுக்கு நன்றி' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.