"காதல் நாடகம்"... பள்ளிச் சிறுமிகள் செல்போனைப் பயன்படுத்த உ.பியில் தடை!
ஆக்ரா: 'லவ் ஜிஹாத்'.. இதைத்தான் நமது மாநிலத்தில் ஒரு அரசியல் கட்சி, 'காதல் நாடகம்' என்று கூறி வருகிறார்கள்.. இந்த லவ் ஜிஹாத் இப்போது உ.பியை ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட தேர்தல் பிரச்சினையாகவும் மாறி வருகிறது. இப்படிப்பட்ட லவ் ஜிஹாத்தில் சிக்கி விடாமல் தங்களது சமுதாய பெண்களைக் காக்க உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த வைசிய சமூகத்துப் பெரியவர்கள், தங்களது சமூகத்தைச் சேர்ந்த பள்ளிச் சிறுமிகள் செல்போன்களைப் பயன்படுத்தக் கூடாது என்று தடை விதித்துள்ளனர்.
வைசிய சமூகத்தவர்கள் பெரும்பாலும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் பெரும் பணக்காரர்கள் ஆவர். இவர்களின் உயரிய அமைப்பான அகில பாரதிய வைசிய ஏக்தா பரிஷத் இந்த செல்போன் தடையை விதித்துள்ளது.
தங்களது சமூகத்துப் பெண்களை, குறிப்பாக பள்ளி மாணவிகளை குறிப்பிட்ட சமூகத்தினர் காதல் என்ற பெயரில் பொய்யாக வீழ்த்தி பணம் பறித்து வருவதாக இந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இதைத் தடுக்கவே செல்போன்களைத் தடை செய்துள்ளதாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆக்ராவில் ஆலோசனை
இதுதொடர்பாக விவாதிக்க ஆக்ரா நகரில் இந்த அமைப்பைச் சேர்ந்த வர்த்தகப் பிரமுகர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கூடி ஆலோசித்தனர். கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா
இந்தக் கூட்டத்தில் மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா, அமைப்பின் தேசியத் தலைவர் சுமந்த் குப்தா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
உ.பி அரசு மீது பாய்ச்சல்
பின்னர் அமைப்பு நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் பேசுகையில், உ.பியில் உள்ள சமாஜ்வாடிக் கட்சி அரசானது குறிப்பிட்ட சமுதாயத்தைக் காக்கும் வகையிலும், அவர்களின் அக்கிரமச் செயலை ஆதரிக்கும் வகையிலும் செயல்படுகிறது. அவர்களுக்குச் சிறப்புச் சலுகைகளையும் வழங்குகிறது. இதனால் மற்ற சமூகத்தினர் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். எனவேதான் எங்களது பெண்களைக் காக்க நாங்களே நடவடிக்கையில் இறங்க நேரிட்டுள்ளது.
பிளஸ்டூ வரை செல்போன் கூடாது
எங்களது சமூகத்துப் பெண்கள் குறிப்பாக மாணவிகள் பிளஸ்டூ படித்து முடிக்கும் வரை செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளோம். இந்த வயது மாணவிகளைத்தான் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் கவர்ந்திழுத்து தங்களது வலையில் வீழத்திப் பணம் பறிக்கின்றனர்.
மனதைக் கெடுக்கும் இன்டர்நெட்
இன்டர்நெட் போன்ற மின்னணு சாதனங்களும், ஊடகங்களும் இளைஞர்களின் மனதைக் கெடுக்கும் வகையில் உள்ளன. இவற்றை வைத்துத்தான் பலர் காதல் புரட்சி என்ற பெயரில் இளம் மாணவிகளையும், சிறுமிகளையும் சீரழிவில் தள்ளுகின்றனர்.
வைசிய சமூகப் பெண்களுக்குக் குறி!
இந்த அக்கிரம இளைஞர்களால் உ.பி. மாநிலத்தில் இளம் சிறுமிகள், மாணவிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகின்றனர். குறிப்பாக எங்களது வைசிய சமூக மாணவிகள்தான் அதிக அளவில் குறி வைக்கப்படுகிறார்கள்.
குழுக்கள் அமைத்துக் கண்காணிப்போம்
எங்களது அமைப்பின் மூலமாக மாநிலம் முழுவதும் சிறு சிறு குழுக்கள் அமைக்கப்படும். அதில் இளம் பெண்கள், இளைஞர்கள் இடம் பெறுவர். இவர்கள் செல்போன் பயன்பாட்டை தடை செய்வதைக் கண்காணிப்பார்கள். எங்களது சமூக இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் ஆலோசனைகளை வழங்குவார்கள்.
அடக்குமுறை இருக்காது
எங்களது சமூக இளைஞர்களிடமும், இளம் பெண்களிடமும் அன்பான முறையில் காதல் நாடகங்களின் ஆபத்தை எடுத்துக் கூறி புரிய வைப்போம். மேலும் கட்டாயப்படுத்தி எதையும் சொல்ல மாட்டோம். மிரட்ட மாட்டோம்.
மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி
எங்களது சமூகத்தைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு கராத்தே பயிற்சியும் அளிக்க ஏற்பாடு செய்யப்படும். இதன் மூலம் காதல் புரட்சிக்காரர்கள் மற்றும் சமூக விரோத சக்திகளிடமிருந்து தங்களை அவர்களால் காத்துக் கொள்ள முடியும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அவமானப்படுத்தும் செயல்
இந்த தடை உத்தரவு குறித்து பாபா சாகேப் பீமாராவ் அம்பேத்கர் பல்கலைக்கழக முதுநிலை மாணவர் ஜிசன் அகமது கூறுகையில், இது மாணவ சமுதாயத்தையும், இளைஞர்களையும் அவமதிக்கும் செயல். மிகவும் வினோதமானதாக உள்ளது இந்த தடை என்றார்.