கொரோனா.. வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வோருக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கத் தொகை.. ஒடிசா அரசு அசத்தல்
புவனேஸ்வர்: இயல்பை மீறிய ஒரு சூழ்நிலை வரும்போது, இயல்புக்கும் அதிகமான ஒரு பதில் நடவடிக்கை தேவைப்படுகிறது. இப்போது ஒடிசா அரசு அதுபோன்று, வழக்கத்தைவிட உயரிய நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ், இந்தியா முழுக்க தீவிரமாக பரவி வரும் நிலையில், அதை கட்டுப்படுத்தி மக்களை காக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளது ஒடிசா மாநில அரசு.
கோவிட் 19, நோய் பெரும்பாலும் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வரக்கூடிய நபர்களிடமிருந்துதான் பரவுகிறது. இதை அறிந்து விமான நிலையங்களில் தீவிர சோதனைகள் கையில் எடுக்கப்பட்டுள்ளன.
கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளன. அதேநேரம் வெளிநாடுகளிலிருந்து இன்னும் அதிகமான மக்கள் ஒடிசா வருவதற்கான வாய்ப்பு இருப்பதால், கொரோனா வைரஸ் பரவ ஆபத்து அதிகம் இருப்பதை அரசு உணர்ந்துள்ளது.
மத்திய அரசுடன் இணைந்து ஒடிசா மாநில அரசு என்னென்ன மாதிரியான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதை பார்க்கலாம் வாங்க: வெளிநாட்டிலிருந்து ஒடிசா மாநிலம் வரக்கூடிய யாராக இருந்தாலும் முதலில் இலவச தொலைபேசி எண்ணில் அவர்களை பற்றி பதிவு செய்துகொள்ள வேண்டும். 104 என்ற தொலைபேசி எண் இதற்காக கொடுக்கப்பட்டுள்ளது.
அல்லது ஆன்லைன் போர்டலிலும் அதைப் பற்றி தெரிவிக்கலாம். https://covid19.odisha.gov.in என்ற வெப்சைட் இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா அறிகுறி.. கேரளாவிலிருந்து எஸ் ஆன மதுரைக்காரர்.. வளைத்துப் பிடிக்க அதிகாரிகள் தீவிரம்!
வெளிநாடு பயணிகள், ஒடிசா, வருகை தருவதற்கு முன்பாக கூட இவ்வாறு பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு பதிவு செய்து கொண்டவர்களை எளிதாக இனம் கண்டு அவர்களை 14 நாட்களுக்கு வீட்டுக்கு உள்ளேயே தனிமைப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
தினமும் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு, அவர்களின் உடல் நிலை பற்றி சுகாதார துறை ஊழியர்கள் கேட்டு அறிந்து கொள்வார்கள். இவ்வாறு தங்களது பெயர்களை பதிவு செய்து கொண்டு, வீடுகளில் தனித்து இருப்போருக்கு 15 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக அரசால் வழங்கப்படுகிறது.
அதேநேரம் அரசு உத்தரவை மீறுவோர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். ஏப்ரல் 15ஆம் தேதி வரை இந்த நடைமுறை அமலில் இருக்கிறது. தேவைப்பட்டால் நீட்டிப்பு செய்யப்படும். வெளிநாட்டிலிருந்து ஒடிசா வரக்கூடிய ஒவ்வொரு பயணியும் அரசின் இந்த வேண்டுகோளுக்கு செவி சாய்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.