காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
பெங்களூர்: காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
மைசூர் மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகாவில் கபினி அணை அமைந்துள்ளது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 16 ஆயிரத்து 500 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அதுபோல் அணையில் இருந்து 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் தற்போதைய நீர்மட்டம் கடல் மட்டத்தில் இருந்து 2,275 அடியாகும். அணையின் மொத்த கொள்ளளவான 2,284அடியை (கடல் மட்டத்தில் இருந்து) விரைவில் தொட்டுவிடும் நிலை உள்ளது.
இதேபோல், மைசூர் அருகேயுள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பருவமழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 83.85ஆக இருந்தது. இதன் மொத்த கொள்ளளவு 124.40 அடி.
அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 90 கனஅடி தண்ணீர் உள்ளே வருகிறது. இதில் 363 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி உற்பத்தியாகும் தலைக்காவிரி அமைந்துள்ள குடகு மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதே இந்த மழைப்பொழிவுக்கு காரணம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கர்நாடக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.